சென்சார் போர்டு அனுமதி பெறாமல் ட்ரைலர் ரிலீஸ்.. சுவாதி பட தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு
சுவாதியின் கதையை அனுமதி பெறாமல் திரைப்படமாக எடுத்து, அதன் ட்ரைலரை வெளியிட்ட படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ரமேஷ் செல்வம் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை: சுவாதி கொலை வழக்கு படத்தின் ட்ரைலரை சென்சார் போர்டு அனுமதி பெறாமல் வெளியிட்ட படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ரமேஷ் செல்வம் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் சுவாதி 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கு சம்பவம் வேலைக்கு சென்று வரும் பெண்களின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியது.
சுவாதி கொலை வழக்கில், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் குற்றவாளி என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். கழுத்தறுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிகிச்சைக்குப் பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சிறையிலிருந்த ராம்குமார், அங்கிருந்த மின்சார வயரைக் கடித்து கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் இதுவரை பல்வேறு மர்மங்கள் நீடிக்கிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், "சுவாதியின் கொலை வழக்கு" என்ற பெயரில் தமிழில் திரைப்படம் தயாரிக்கப்பட்டு, அதன் முன்னோட்டக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் தோன்றும் அனைத்து காதாபாத்திரங்களும் உண்மை பெயருடனும், ராம்குமாரை போலீசாரே கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், தனது மகளின் கதை எந்தவித அனுமதியும் பெறாமல் படமாக்கப்பட்டுள்ளதாகவும், திரைப்படம் வெளியானால், தனது குடும்பத்தினர் மிகுந்த மனஉழைச்சலுக்கு உள்ளாவார்கள் என்பதால், படத்தை தடை செய்யவேண்டும் என தமிழக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தார்.
அந்த புகார் மாநகர காவல் ஆணையர் விசுவநாதனுக்கு அனுப்பப்பட்டு, அவரது உத்தரவின்பேரில் மத்திய குற்றப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ரமேஷ்செல்வன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.