நெல்லையில் பிரபல தொழிலதிபர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு.. ரூ.1.15 கோடி பறிமுதல்.. தேர்தல் பணமா?
திருநெல்வேலி: நெல்லையில் மிகப் பிரபலமான சாந்தி ஸ்வீட்ஸ் மற்றும் அருவி பேக்கரி நிறுவனர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.1.15 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடந்த இந்த ரெய்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காக பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் தமிழகம் முழுவதும் பல கோடி மதிப்பிலான தங்கம், ரொக்கப் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உரிய ஆவணங்கள் இன்றியும், கணக்கில் வராதவையுமாக உள்ளன.
இந்த சூழலில், நெல்லை மாவட்டத்தில் தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நெல்லை சந்திப்பில் பிரபலமான சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடையை நடத்தி வருபவர் சிவசுப்பிரமணியன். இவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறை சிறப்புக் குழு அதிகாரிகளும், நெல்லையை சேர்ந்த தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். பல குழுக்களாக பிரிந்து நடத்தப்பட்ட சோதனையின் போது, பல்வேறு ஆவணங்கள் மற்றும் வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இந்த சோதனையின் முடிவில் சிவசுப்பிரமணியன் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.40 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், நெல்லை ரெட்டியார்பட்டியை சேர்ந்த தொழிலதிபரின் மனைவி லட்சுமி நடராஜனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் வருமான வரித் துறை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையிலும் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், கணக்கில் வராத ரூ.75 லட்சத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
லட்சுமி நடராஜன் நெல்லை மாநகரின் பல இடங்களில் அருவி என்ற பெயரில் பேக்கரி கடையை நடத்தி வரும் நடராஜன் என்பவரின் மனைவி ஆவார். இவர் சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த அதிரடி சோதனைகளின் மூலம் தொழிலதிபர்கள் சிவசுப்பிரமணியன், லட்சுமி நடராஜன் ஆகியோரிடம் இருந்து மொத்தம் ரூ.1.15 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது? எதற்காக இவர்களின் வீடுகளில் இவ்வளவு பெரிய தொகை இருப்பு வைக்கப்பட்டு இருந்தது? வருமான வரி முறையாக செலுத்துகிறார்களா? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications