காவிரி வாரியம் தொடர்பான உமாபாரதியின் கருத்தால் தமிழகத்தில் குழப்பம்: பிரதமரிடம் ஜெ. புகார்!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியின் கருத்தால் தமிழகத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டமில்லை என மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், வெங்கையாநாயுடு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் அப்படி எதுவும் கூறவில்லை என நான் தெரிவித்திருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி பேசியுள்ளார். நீர்வளத்துறை அமைச்சரின் பேச்சால் தமிழக மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்தித்து கர்நாடக அனைத்து கட்சிக் குழு மனு அளித்தது. மனுவில் காவிரி விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை கர்நாடகா அளித்துள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்தினால்தான் தமிழக விவசாயிகளின் உரிமை பாதுகாக்கப்படும். அதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications