காவிரி நீருக்கு பின்னால் இருக்கும் அரசியல்... மாணவி வளர்மதி சொல்லும் 'பகீர்' தகவல்!
காவிரி நீர் கர்நாடக முதலாளிகளுக்கு தேவைப்படுவதால் தான் அதனை வைத்து அரசியல் செய்கிறார்கள் என குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலையான மாணவி வளர்மதி கூறினார்.
சென்னை: காவிரி நீர், கர்நாடக முதலாளிகளுக்குத் தேவைப்படுகிறது. அதனால் தான் காவிரி நீரை கொடுக்காமல் அரசியல் செய்து வருகிறார்கள் என மாணவி வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார்.
நெடுவாசலில் ஹைட்ரோ திட்டத்தை எதிர்த்து போராட, சேலம் அரசு மகளிர் கல்லூரியில் நோட்டீஸ் விநியோகம் செய்ததற்காக குண்டர் சட்டத்தில் கைது மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். பிறகு நீதிமன்றம் அவர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீக்கியது. நக்ஸலைட் என்று சொல்லப்பட்ட மாணவி வளர்மதி ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
''அரசு தான் மக்கள் எப்படி சிந்திக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் செய்கிறது. உதாரணமாக, குண்டர் சட்டம் என்றால் என்ன? உண்மையில் யாரெல்லாம் குண்டர்கள் என அரசுதான் அதற்கு ஏற்றார்போல் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது.
அதேபோல் நக்ஸல்கள் குறித்தும் மாவோயிஸ்டுகள் குறித்தும் அவர்கள் தீவிரவாதிகள் தான் என்கிற எண்ணத்தை விதைத்துவிட்டது. ஆனால் அரசு உருவாக்கும் பிம்பம் உண்மையா பொய்யா என ஆராய்வது நம் கடமை.
மீடியா எந்த பிரச்சனையை பேசும்?
தமிழ்நாட்டில் நீட், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, கதிராமங்கலம் ஓஎன்ஜிசி பிரச்சனை, விவசாயிகள் போராட்டம் என்று பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் இரட்டை இலையை மீட்பது குறித்த விஷயங்களைத்தான் மீடியா முக்கியத்துவம் கொடுக்கிறது.
எது முக்கிய பிரச்சனை?
ஒரு கட்சியின் சின்னத்தை மீட்பதற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விவாசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கும் அனிதாக்களின் உயிர்களைக் காப்பதற்கும் அரசு தயாராக இல்லை. ஊடகங்களும் இதையே திரும்பத் திரும்பக் காட்டுவதால் நெடுவாசல், கதிராமங்கலம், அனிதாக்கள் பிரச்சனையை மறந்துவிடுகிறோம்.
திட்டமிட்ட சதி
காவிரி டெல்டா பகுதிகளில் வறட்சியை அரசு திட்டமிட்டு செய்கிறது. காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கண்டித்தும் மத்திய அரசு நீர் திறந்துவிட எந்த நடவடிக்கையும் செய்யவில்லை.
காவிரி நீரை வைத்து அரசியல்
அதனால் அங்கு வறட்சி உருவாக்கப்படுகிறது. வறட்சியினால் மக்கள் நிலங்களை விற்றுவிட்டு போவார்கள் என்பது அரசின் கணக்கு. ஏனென்றால் காவிரி டெல்டா பகுதிகளில் முதலாளிகளுக்கு என்று அரசு சில திட்டங்களை வைத்துள்ளது. அதற்காக திட்டமிட்டு கொண்டுவரப்பட்டதுதான் இந்த வறட்சி.
முதலாளிகளுக்காக அரசு
கர்நாடக விவசாயிகளும் பிரச்சனையில் தான் உள்ளார்கள். காவிரி நீர் கர்நாடக முதலாளிகளுக்கு தேவைப்படுகிறது. அதற்காகத்தான் காவிரி நீரை வைத்து அரசியல் செய்கிறார்கள்'' -இவ்வாறு மாணவி வளர்மதி கூறினார்.