காவிரி டெல்டாவில் மேலும் 2 விவசாயிகள் மரணம்- 2 மாதத்தில் 28 விவசாயிகள் பலியான பரிதாபம்!
காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியதால் விஷம் குடித்தும் அதிர்ச்சியிலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமறுத்தாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதாலும் சாகுபடி செய்த பயிர்கள் கருகி அழிந்தன. இதனால் ஏற்பட்ட கடும் சேதத்தால் மனம் உடைந்த விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமடைந்து வருகின்றனர்.
திருவையாறு அடுத்த புளிமாத்தூரை சேர்ந்த அரவிந்த் என்ற இளம் விவசாயி 13 ஏக்கரில் நெல்சாகுபடி செய்திருந்தார். காவிரியில் நீர் கிடைக்காத நிலையில் நிலத்தடி நீரும் ஏமாற்றிவிட்டதால் பயிர்கள் காய்ந்து விட்டன. இதனால் மனமுடைந்த அரவிந்த் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த சாமிநாதன் என்ற விவசாயி ஒருவரும் உயிரிழந்தார். காலையில் வயலுக்கு சென்ற அவர் கருகிய நெற்பயிர்களை கண்டு வயலிலேயே மயங்கி விழுந்தார்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை நெல் சாகுபடி நடைபெறவில்லை. ஒருபோக சம்பா நெல் சாகுபடியிலாவது பிழைத்துக்கொள்ளாலம் என நினைத்த தமிழக விவசாயிகளின் கனவு இந்த ஆண்டும் பலிக்கவில்லை. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிர்ச்சியில் மரணமடைவதும் நீண்டு கொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 28 விவசாயிகள் உயிரிழந்துவிட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம்
•பட்டுக்கோட்டை வட்டம் பொன்னவராயன் கோட்டை, உக்கடை மாசிலாமணி வயது 55, 2 ஏக்கர் நிலம், விஷம் அருந்தி தற்கொலை.
•திருவையாறு ஒன்றியம் திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா மற்றும் வெள்ளையன் மாரடைப்பால் மரணம்.
•திருப்பணந்தாள் ஒன்றியம் மணக்குண்ணம் மேலத் தெருவை சேர்ந்த ராமசந்திரன் மனைவி கீர்த்திகா வயது - 39, அதிர்ச்சி மரணம், 2 ஏக்கரில் 1 ஏக்கர் சாகுபடி.
திருவாரூர்
•திருவத்துறைப்பூண்டி ஒன்றியம், ரெகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் வயலில் தற்கொலை.
• கோட்டூர் ஒன்றியம், ஆதிச்சபுரத்தை சேர்ந்த அழகேசன் தற்கொலை
•கொரடாச்சேரி ஒன்றியம் முசிறியம் கிராமத்தை சேர்ந்த சேகர் - வயது 52, தற்கொலை. 2 ஏக்கர் நிலம்
•கோட்டுர் ஒன்றியம் திருக்களார் நடராஜன் - வயது 75, அதிர்ச்சி மரணம் - 5 ஏக்கர் நிலம்
•கோட்டுர் ஒன்றியம் பாளையங்கோட்டை அசோகன் -வயது 55, வங்கியில் மயங்கி விழுந்து மரணம். 6 ஏக்கர் நிலம்.
நாகப்பட்டினம்
•கீழ்வேளுர் சரகம், எரவாஞ்சேரி ஊராட்சி, பரங்கி நல்லூர் எஸ்.ஜெயபால் -வயது 57, குத்தகை விவசாயி வயலில் அதிர்ச்சி மரணம்
•கீழ்வேளுர் ஒன்றியம் வெண்மணி ஊராட்சிக்குட்பட்ட, கீழகாவாலகுடி நவநீதம் மயங்கி விழுந்து மரணம்.
•கீழ்வேளுர் அருகே உள்ள சங்கமங்களம் கிராமம், தெற்குவெளி மாதா கோவில் தெருவை சேர்ந்த அந்தோனிசாமி வயது - 62, இவருக்கு சிக்கல் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. மாரடைப்பால் மரணம்.
•தலைஞாயிறு ஒன்றியம், பிரிஞ்சுமூலை கிராமத்தை சேர்ந்த முருகையன் தூக்குப் போட்டு தற்கொலை. 10. முருகையனுக்கு குத்தகைக்கு நிலம் கொடுத்த பாலசுப்பிரமணியம் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நிலையில் மாரடைப்பால் மரணம்.
•கீழ்வேளுர் அடுத்துள்ள இருக்கை காலணி சேர்ந்த தனுசம்மாள் - வயது 67, வயலில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். இவருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது.
•தலைஞாயிறு ஒன்றியம் நீர்மூலை செவந்து மனைவி ஜெகதாம்பாள் மாரடைப்பால் மரணம் - 3 1/2 ஏக்கர் நிலம்.
•கீழையூர் மாரியம்மாள் கோவில் தெரு மாரிமுத்து வயது - 67, மாரடைப்பால் மரணம் - 6 ஏக்கர் நிலம்.
•சீர்காழி அடுத்துள்ள ஆலாலசுந்தரம் ஊராட்சிக்குட்பட்ட அழகிய நத்தம் கிராமத்தை சேர்ந்த ரத்தினசபாபதி வயது - 60, வயலில் மயங்கி விழுந்து மரணம், 3 ஏக்கர் நிலம்
•கீழையூர் மெயின் ரோடு, ராஜகுமாரன் - 65, நடுக்கட்டளையில் 8 ஏக்கர்நிலம், மாரடைப்பால் மரணம்.
திருச்சி மாவட்டம்
•திருவெறும்பூர் மைக்கேல் வயது - 80, மாரடைப்பால் மரணம்.
•குளித்தலை அடுத்துள்ள மேலவதியத்தை சேர்ந்த சங்கரப்பிள்ளை வயது -57, 7 ஏக்கர் நெல், வாழை பயிரிடப்பட்டுள்ளது. இவர் மாரடைப்பால் மரணம்.
தூத்துக்குடி மாவட்டம்
கயத்தாறு அருகில் உள்ள தெற்கு மயிலோடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லெட்சுமணன் மகன் முருகன் வயது 31, 10 ஏக்கரில் பாசிப்பயிறு சாகுபடி விஷம் குடித்து மரணமடைந்தார்.
நெல்லை மாவட்டம்
•சீவலபேரி அடுத்துள்ள மடத்துப்பட்டி கீழத் தெருவை சேர்ந்த விவசாயி தாவீது வயது - 55, 2 ஏக்கர் சொந்த நிலம், 6 ஏக்கர் குத்தகை சாகுபடி. விஷம் குடித்து தற்கொலை.
திருவள்ளுர் மாவட்டம்
•பூண்டி ஒன்றியம், சோம தேவன்பட்டு கிராமம், எத்திராஜ், மாரடைப்பால் மரணம் 8 ஏக்கர்நிலம் சாகுபடி.
ஈரோடு மாவட்டம்
•கொடுமுடி அருகில் உள்ள வெங்க மேட்டுரை சேர்ந்த முத்துசாமி கவுண்டர் வயது 70, 3 1/2 ஏக்கர் நிலத்தில் மஞ்சள் குத்தகை சாகுபடி பூச்சிமருந்து குடித்து தற்கொலை.
•வெங்கம்பூர் கிராமம், கரட்டுப் பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் வயது 55, தற்கொலை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் விவசாயிகள் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது என்பதுதான் சோகம்.












Click it and Unblock the Notifications