கர்நாடகாவை கண்டித்த சுப்ரீம் கோர்ட்.. காவிரி நடந்து வந்த பாதை #cauvery
சென்னை: தமிழகத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் காவிரி நீர் வழங்க வேண்டும். அவர்களை வாழ விடுங்கள்'' என்று கர்நாடகா மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்திற்கு கடந்தாண்டு, 35 டி.எம்.சி இந்த ஆண்டு, 27 டி.எம்.சி என மொத்தம் 62 டிஎம்சி நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஆனால், இந்த தருணத்தில் தங்களது மாநில அணைகளில் 180 டிஎம்சி நீர் இருக்க வேண்டும் என்றும், மாறாக, 80 டிஎம்சி நீர்தான் இருக்கிறது என்றும் கர்நாடகா அரசு கூறியிருந்தது. முன்பு தமிழகம் கோரியிருந்த 50 டிஎம்சி நீரை திறக்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
விவசாயத்திற்கு போதுமான நீர் இல்லாததால், ஜூன் மாதம் குறுவை நெல் சாகுபடி, சம்பா பருவ சாகுபடி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் வறுமையின் விழும்பில் தாங்கள் உள்ளதாகவும் கூறி, டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகம் காவிரியில் இந்த ஆண்டில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரில் 50.052 டி.எம்.சி தண்ணீரை பாக்கி வைத்து இருக்கிறது. இதனால் டெல்டா பகுதியில் சம்பா பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் பாக்கி வைத்துள்ள தண்ணீரை, உடனடியாக தமிழகத்துக்கு வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கேட்டுக்கொண்டனர். அதே நேரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கர்நாடக எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கர்நாடக அரசை வலியுறுத்தின.
இதனிடையே முதல்வர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்திய நாரிமன். அப்போது, காவிரியில் தமிழகத்தின் பங்கு தண்ணீரை திறந்து விட வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார். இதற்கு சித்தராமையா, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை என்று கூறினார்.
இந்த கருத்தை ஏற்க மறுத்த வக்கீல் நாரிமன், தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள மனுவால் சட்ட சிக்கல் ஏற்படும். சுப்ரீம் கோர்ட்டில் நம்முடைய கருத்தை நியாயப்படுத்துவது கடினம். அதனால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விடுமாறு ஆலோசனை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 4 அணைகள் உள்ளன. இந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததால், அந்த அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. 4 அணைகளிலும் சேர்த்து மொத்தம் 51 டி.எம்.சி. தண்ணீர் தான் இருக்கிறது. மேலும் அணைகளுக்கு நீர் வரத்தும் குறைவாகவே உள்ளது. எனவே காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு சாத்தியமே இல்லை என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறினார்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 50.52 டிஎம்சி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு,, ''காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை ஏன் கர்நாடகா அரசு அமல்படுத்தக் கூடாது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்று தொடர்ந்து மூன்று மாதங்களாக தமிழகத்தின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக விவசாயிகளுக்கு உதவ வேண்டியது கர்நாடக அரசின் கடமை. பற்றாக்குறை காலத்தில் நீரை எப்படி பகிர வேண்டும் என கடந்த 2007ஆம் ஆண்டைய நடுவர் மன்ற தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தும் ஏன் அதை பின்பற்றுவதில்லை. தீர்ப்பை மதிக்க வேண்டும். வரும் திங்கள் கிழமை கர்நாடகா அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
இரு மாநிலங்களின் துயரங்களையும் நாங்கள் அன்று கேட்போம். இரண்டு மாநிலங்களும் ஒற்றுமையுடன் இந்த விஷயத்தில் செயல்பட வேண்டும். விவசாயம் உள்பட பலரின் வாழ்வாதாராங்களும் இதில் அடங்கியுள்ளது. மழை வருமா? வராதா? என்று கூற முடியாது. ஆனால். நடுவர் மன்றத் தீர்ப்புக்கு கர்நாடகா அரசு பணிய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
காவிரி தண்ணீருக்காக தமிழகம் நடத்திய சட்ட போராட்டங்கள்
- 1807ம் ஆண்டு மைசூர் மற்றும் மெட்ராஸ் மாகாண அரசுகளுக்கு இடையே தொடங்கிய காவிரி பிரச்னை, 200 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது. தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு இடையில் 40}க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் தீர்வு ஏற்படவில்லை. எனவே, வேறு வழியின்றி இப்பிரச்னை குறித்து ஆராய 1990}ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
- வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி நதிநீர் பிரச்னையை தீர்க்க, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- கடந்த, 1990 ஜூன் 2ம் தேதி, நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையில், மூன்று பேர் அடங்கிய, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
- 1991ல் இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய நடுவர் மன்றம் தமிழகத்துக்கு கர்நாடகம் ஆண்டு தோறும் 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிட்டது.
- கடந்த, 2007 பிப்ரவரி 5ம் தேதி, காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
- காவிரியில் ஓடும் மொத்த நீர் 740 டிஎம்சி (ஆண்டுக்கு) என அளவிடப்பட்டுள்ளது. இதில், கேரளாவுக்கு 30 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி, சுற்றுப்புறச் சூழலுக்கு 10 டிஎம்சி, கடலில் சேரும் நீர் 4 டிஎம்சி என பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தமிழகத்துக்கான 192 டிஎம்சி நீரை கர்நாடகம் ஜூன் முதல் மே மாதம் வரை எவ்வளவு அளவுகளில் பிரித்து கொடுக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்துக்கு 419 டிஎம்சி என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகம் 192 டிஎம்சி நீரை மட்டுமே தரும். இதிலிருந்து 7 டிஎம்சி நீரை புதுவைக்கு கொடுக்க வேண்டும். மீதம் உள்ள நீரை காவிரியின் கிளை நதிகளான அமராவதி, பவானி, நொய்யல், பாலாறு ஆகியவற்றில் இருந்தும், மழை நீர் வந்து சேரும் ஓடைகள், பள்ளங்கள் மூலமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- கர்நாடகாவுக்கான 270 டிஎம்சி நீரில் 192.5 டிஎம்சி நீரை மட்டும் அவர்கள் காவிரியில் இருந்து எடுக்க வேண்டும். மீதம் உள்ளதை அவர்களது மாநிலத்தின் இதர ஆதாரங்களில் இருந்து எடுக்க வேண்டும்.
- காவிரி நதியின் மேட்டுப் பகுதியில் உள்ள கேரளாவுக்கு காவிரி நீர் செல்ல முடியாது என்பதால் கபினிக்கு வயநாட்டில் இருந்து செல்லும் நீரில் 21 டிஎம்சி நீரை அவர்கள் மாநில எல்லைக்குள் எடுத்துக்கொள்ளலாம். காவிரியின் கிளை நதியான பவானி படுகையில் இருந்து 6 டிஎம்சியும், அமராவதியின் கிளை நதியான பாம்பாற்றில் 3 டிஎம்சியும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, 2013 பிப்ரவரி, 20ம் தேதி, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. அதனால், கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடியை சந்தித்து, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை மனு அளித்தார்.
- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டதன் மூலம், காவிரி நதிநீரைப் பெறுவதற்காக இனி நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 50.52 டிஎம்சி தண்ணீருக்காக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தமிழகம்.












Click it and Unblock the Notifications