இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
சென்னை: கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர், கடந்த வியாழக்கிழமை இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போது கோவையில் மிகப்பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளை பிடிக்க, டி.ஐ.ஜி நாகராஜ் தலைமையில், 3 எஸ்.பி., 6 டி.எஸ்.பி., 20 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 300 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், சென்னை ஐ.டி பொறியாளர் சுவாதி கொலை வழக்கு பாணியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிவாளால் வெட்டிய நபர்களின் முகம், அவர்கள் பயன்படுத்திய வாகனம் ஆகியவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அத்துடன், சம்பவ இடத்தில் கொலையாளிகள் விட்டுச்சென்ற சில பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பைக்கில் தப்பிய 4 பேரையும் சிலர் நேரடியாக பார்த்ததாக கூறியுள்ளனர்.
இவற்றின் அடிப்படையில் தனிப்படை போலீசார், புலன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சசிகுமார் பயன்படுத்திய மொபைல் போன், தனிப்படை வசம் உள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப், செல்போன் அழைப்பு விவரங்களை சைபர் கிரைம் போலீசார் அலசி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஏற்பட்ட மோதல், தகராறில் தொடர்புடைய நபர்கள், கோவை நகர், புறநகரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சசிகுமார் கொலை வழக்கில் தனிப்படை விசாரணையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சசிகுமார் கொலை வழக்கில் பாகிஸ்தான் சதி இருப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்தார். கோவையில் மதக்கலவரத்தை தூண்ட அந்நிய சக்திகள் சதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. கொலையாளிகள் சிக்குவார்களா?












Click it and Unblock the Notifications