சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கு: டிசம்பரில் முடிக்க உத்தரவு - விசாரணை விறுவிறுப்பு
சிவகங்கை: சிறுமி பலாத்கார வழக்கை டிசம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளது.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சிவகங்கையை சேர்ந்த பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தை, அண்ணன், உறவினர்கள், சிவகங்கை டவுன் போலீஸ் எஸ்ஐ, கண்டக்டர் உள்ளிட்ட 10 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கார்த்திக் ஜாமீன் பெற்றுள்ளார். மற்ற அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்கக் கோரி செவ்வாய்கிழமையன்று சிபிசிஐடி போலீசார், சிவகங்கை மகிளா கோர்ட்டில் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில் சில குறைபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் இறுதி கெடு
இந்நிலையில், சிபிசிஐடி எஸ்பியாக தற்போது பொறுப்பேற்றுள்ள அம்ரித்சிங், இந்த வழக்கை டிசம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சீனிவாசன், நேற்று சிவகங்கை வந்தார். இந்த வழக்கின் விசாரணை குறித்து, உயரதிகாரிகளுடன் அவர் ஆய்வு செய்தார். இதனால் இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளது.
சப். இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு
இதனிடையே கடந்த மாதம் கைதான சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஜாமீன் கேட்டு மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் நேற்று ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் கைதான 9 பேரையும் வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ஜெயராஜ் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications