லஞ்சம் வாங்கிய சென்னை துறைமுக பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை: சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: ரூ.25000 லஞ்சம் வாங்கிய வழக்கில், துறைமுக பொறியாளருக்கு சி.பி.ஐ., நீதிமன்றம், இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை துறைமுகத்தில், துணை தலைமை பொறியாளராக பணியாற்றியவர் பிரபாகர். துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் வாங்குவதாக இவர் மீது சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகமான புகார்கள் வந்தன.

அந்தப் புகார்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் பிரபாகர், ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தின் உரிமத்தைப் புதுப்பிக்க லஞ்சம் கேட்டதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் அதிகாரிகள் பிரபாகரைக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பிரபாகர், அந்த கப்பல் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரியிடமிருந்து ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக பெற்றாராம். கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரபாகர் கையும், களவுமாக பிடிபட்டார்.
இந்த வழக்கு, சென்னை சி.பி.ஐ., 13வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, நீதிபதி ஜவஹர் தீர்ப்பளித்தார். அதில் சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன. பிரபாகருக்கு, இரு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications