போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் தர சி.பி.ஐ எதிர்ப்பு
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் தரக்கூடாது என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி. போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான இவருக்கு தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டன.
கட்டுமான தொழிலிலும் ஈடுபட்டு வந்த சேகர் ரெட்டிக்கு தமிழக அரசில் உள்ள உயர் அதிகாரிகளின் துணை இருந்ததால் பல்வேறு துறைகளின் ஒப்பந்தங்களும் கண்மூடித்தனமாக கொடுக்கப்பட்டு வந்தன.கணக்கில்லாமல் கோடிக்கணக்கில் சேகர் ரெட்டியிடம் பணம் குவிந்திருப்பது தொடர்பாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 136 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதில், 92 கோடி ரூபாய் புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 177 கிலோ தங்கக்கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டி ஆகியோரை சிபிஐ போலீசார் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை குற்றச்சதி, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திடீரென கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலுவை ஜனவரி 3ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று சேகர் ரெட்டியும் அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டியும் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு கடந்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதை அடுத்து, விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. . விசாரணை இன்னும் முடிவடையாததால் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பு வக்கீல் வாதிட்டார். சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமீன் தரக்கூடாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications