வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்- வருமான வரி ஆணையர் வீட்டில் சிபிஐ ரெய்டு!
பழனி: சென்னை வருமான வரித்துறை ஆணையரின் பழனி வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பழனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழனி அருகே அமைந்துள்ள சென்னை மண்டல வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணசாமி வீட்டில்தான் சி.பி.ஐ அதிகாரிகள் இந்த அதிரடி ரெய்டினை மேற்கொண்டுள்ளனர்.
பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. வருமான வரித்துறை சென்னை மண்டல ஆணையராக பணிபுரிந்து வருகிறார். நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைக்கும் பணியை கவனித்து வரும் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை பழனி பழைய ஆயக்குடியில் உள்ள அவரது பங்களாவிற்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் வீட்டில் இருந்த அவரது பெற்றோர் திடுக்கிட்டனர். அதிரடியாக உள்ளே புகுந்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் ஏதும் சிக்கியதா என தெரியவில்லை. அப்பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பழைய ஆயக்குடியில் உள்ள கிருஷ்ணசாமி வீட்டில் அவரது தாயார் 70 வயதான முனியம்மாள் வசித்து வருகிறார். கிருஷ்ணசாமியின் ஒரு மகள் மீனா, பழனி அருகே உள்ள சேரன் ஜீவா நகரில் வசித்து வருகிறார். மற்றொரு மகள் நர்மதா நேதாஜி நகரில் வசித்து வருகிறார். இவர்கள் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
திருப்பூர், கோவை, பழனி என பல இடங்களில் பல வீடுகளை வாங்கி வாடகைக்கு வாடகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. பழனி ஏரியாக்களில் நிலங்களை வாங்கிப் போட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னதாக மதுரை மண்டல ஆணையராக அவர் பணியாற்றியுள்ளார்.
வருமான வரி கட்டாதவர்களுக்கு சோதனையாக விளங்கும் வருமான வரித்துறையின் அதிகாரி ஒருவரே சொத்துக் குவிப்புப் புகாரில் சிக்கியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications