குற்றாலத்தில் வளைத்து வளைத்து செல்போன் திருடிய நபர் கைது... 13 போன்கள் பறிமுதல்
குற்றாலம்: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் செல்போன் தி்ருடிய நபரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 13 போன்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவது குற்றாலம். அருவிகளின் நகரமான இப்பகுதியில் அருவிகளில் குளிக்கும் போது பெண்களிடம் தங்க சங்கிலியை பறிக்கும் கும்பல்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மேலும் சுற்றுலாப் பயணிகளின் உடமைகளை திருடும் கும்பல்கள் நடமாட்டம் இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து குற்றாலத்தில் பொருத்தப்பட்டுள்ள 50 சி.சி.டி.வி.நவீன கண்காணிப்பு கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் மெயின் அருவிப் பகுதியில் ஒருவர் கார்களில் கதவைத் திறந்து காரிலிருக்கும் பொருட்களை திருடுவதை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டனர்.
உடனடியாக மப்டி உடையில் சென்ற போலீசார் அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த அயூப் என்பதும் அவர் சுற்றுலாத் தலங்களில் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளதும் தெரிய வந்தது.
குற்றாலம் பகுதியில் கார்களில் கண்ணாடிகளை லாவகமாக திறந்து 13க்கும் மேற்பட்ட செல்போன்களை இந்த நபர் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 13 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.