வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறைந்த வட்டியில் கடன்: அருண் ஜெட்லி உறுதி
சென்னை: தமிழக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் வழங்கப் படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
தமிழக வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சென்னை வந்துள்ளார். இன்று காலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுத்துறை வங்கி சார்பில் தலா ரூ.1 லட்சம் கடனுதவி அவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் சென்ற அருண் ஜெட்லி, அங்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக வெள்ள சேதம் மற்றும் நிவாரண உதவிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அருண் ஜெட்லி. அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் பெய்த கனமழையால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை காப்பீட்டு தொடர்பாக பொதுக்காப்பீட்டு நிறுவனங்களுக்கு 11,000 காப்பீட்டு முறையீடுகள் வந்துள்ளன. இந்த முறையீடுகளுக்கான காப்பீட்டு பலன்களை 4 வாரங்களுக்குள் அளிக்க பொதுக்காப்பீட்டு நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படும். பிரதமரின் காப்பீடு திட்ட உறுப்பினர்களும் வெள்ள நிவாரண உதவிகளைப் பெறலாம்.
அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிகளின் மூலம் உடனடி நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிகளின் சார்பாக அளிக்கப்படும் உதவிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து குழு அனுப்பப் படும்" என்றார்.












Click it and Unblock the Notifications