வெள்ளத்தின்போது ஜெ. அரசு மெதுவாக செயல்பட்டதாக மத்திய குழு அறிக்கை அளிக்கவில்லை: தலைமைச் செயலாளர்
சென்னை: மழை வெள்ளத்தின்போது தமிழக அரசு மெதுவாக செயல்பட்டதாக மத்திய குழு அறிக்கை அளிக்கவில்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2-ந் தேதி ‘எக்கனாமிக் டைம்ஸ்‘ நாளேட்டில், ‘‘வெள்ள நிவாரணப் பணியில் தமிழ்நாடு மெதுவாக செயல்பட்டது - மத்திய அறிக்கை கூறுகிறது'' என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து, அந்த தகவலின் உண்மைத்தன்மையை சோதித்து அறியாமல், அந்த செய்தியை பிற மீடியாக்களும் வெளியிட்டுள்ளன.

அந்த பத்திரிகையின் கட்டுரையில், "மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில், வெள்ள பாதிப்புக்கு அதிகமாக பெய்த மழை மட்டுமே காரணம் இல்லை, மோசமான கழிவுநீர் அகற்றல் முறையும், நீர்த் தேக்கங்களில் இருந்து கூடுதலாக நீரை வெளியேற்றியதும் காரணமாகும்" என்று கூறப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் குழு மேற்கொண்ட ஆய்வில், "குஜராத், ஒடிசா மாநிலங்களை போன்று விரைவாக தமிழ்நாடு செயல்பட்டு இருந்தால் பேரிழப்பை தவிர்த்திருக்க முடியும்" என்றும் கூறியுள்ளதாக கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ‘‘ஒரு நீர்த்தேக்கம் திறப்பின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தை வெளியேற்றும் அளவில் சென்னையில் கழிவுநீர் அகற்றல் முறைகள் வலுவாக இருக்கவில்லை''என்று கூறியதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
‘எக்கனாமிக் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியான இந்த கட்டுரை அடிப்படை ஆதாரமற்றது; தவறானது.
இந்த விஷயம் தொடர்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டது. அதற்கு பதில் அளித்து அந்த அமைச்சகத்திடம் இருந்து 3-ந் தேதி கடிதம் வந்துள்ளது.
அதில், அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதுபோல், "மத்திய புவி அறிவியல் அமைச்சகத்திடம் எந்த அறிக்கையும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் வந்த தகவல் எதையும் அமைச்சகம் தங்கள் கருத்தாக ஏற்கவும் இல்லை.
கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி வெளியிடப்பட்ட என்னுடைய அறிக்கையில் விரிவாக கூறி உள்ளேன். குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளம் அரிதிலும், அரிதான இயற்கை பேரிடராகும். மாறாக நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றும் மேலாண்மையில் ஏற்பட்ட குறைபாடு காரணம் அல்ல. இதில் எந்த குறையும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளேன்.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழையில், தமிழக அரசு எடுத்த மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு, மறுகுடியமர்வு போன்ற பணிகள் பரவலான பாராட்டை பெற்றன என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசுக்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் வந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது போல, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறித்த எந்த அறிக்கையும் இந்த அமைச்சகம் தயார் செய்யவில்லை. அந்த பத்திரிகை நிருபர் தெரிவித்துள்ள அனுமானங்கள் அனைத்தையும் அமைச்சகம் மறுக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications