மோடி நாடு திரும்பிய பிறகுதான் தமிழகத்திற்கு மத்திய குழு வருமாம்.. சொல்கிறார் ராவ்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பிய பின்னர் தமிழக மழை வெள்ள சேதத்தைப் பார்வையிட மத்திய குழுவை அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.
மோடி வரும் வரை மத்திய அரசிலிருந்து யாரும் எட்டிப் பார்க்க மாட்டார்கள் என்பது போல ராவ் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி தற்போது மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் இந்த நாடுகளுக்குக் கிளம்பிச் செல்வதற்கு முன்பே தமிழகத்தை மழை, வெள்ளம் உலுக்கி எடுத்து விட்டது என்பது நினைவிருக்கலாம். இதுவரை மத்திய அரசு சார்பில் யாரும் வந்து எட்டிக் கூட பார்க்கவில்லை. பாஜக சார்பிலான குழுவே கூட மிக மிகத் தாமதமாகத்தான் வெள்ளம் பாதித்த பகுதிகளை வேடிக்கை பார்த்து வருகிறது.
இந்த நிலையில் சென்னைக்கு வந்த முரளிதர ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் அவதிப்படுவது வருத்தமளிக்கிறது. பாரதிய ஜனதா அரசு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்.
பிரதமர் மோடி இந்தியா திரும்பிய பின், தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய குழு ஆய்வு செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்.
மோடி நாடு திரும்பியதும் மறக்காமல் தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது, பார்த்து ஏதாவது செய்யுங்கள் என்று யாராவது நினைவூட்டினால் நல்லது..!












Click it and Unblock the Notifications