வந்தார்கள், சென்றார்கள்.. மத்திய குழு மீது மக்கள் கடும் அதிருப்தி
சென்னை: வெள்ள பாதிப்பைப் பார்வையிட வந்த மத்திய குழு உறுப்பினர்கள் தங்களிடம் குறை கேட்கவில்லை. நின்று கூட பேசவில்லை. வந்த வேகத்தில் சென்று விட்டதாக மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக் குழு வந்துள்ளது. இவர்கள் நேற்று முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து வெள்ள சேதத்தைப் பார்வையிடும் பணியைத் தொடங்கினர். நேற்று மாலை முதல் பணியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வுகள் நடத்தினர்.

தாம்பரம் பள்ளியில்
முதலில் தாம்பரத்தில் உள்ள சேவாசதன் பள்ளிக்கு வந்தனர். சமத்துவ பெரியார் நகர், அஞ்சுகம் நகர், அம்பேத்கர் புதுநகர் பகுதியைச் சேர்ந்த 1700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

4 பேரிடம் விசாரணை
இந்த பள்ளிக்கு வந்த மத்திய குழுவினர், ஒரு அறைக்கு சென்றனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மத்திய குழுவினரை சந்திக்க முடியாத சூழல் நிலவியது. 4 பேரை மட்டும் கூப்பிட்ட மத்திய குழுவினர், அவர்களை விசாரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

பேசலையே, கேட்கலையே
இதனால் அங்கிருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். நம்மிடம் பேசவில்லையே, குறை கேட்கவில்லையே என்று அவர்கள் ஆதங்கப்பட்டனர். ஆனால் அத்தனை பேரிடமும் மத்திய குழு பேசினால் மற்ற இடங்களுக்கு அவர்கள் போக முடியாது என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்று கடலூர் பயணம்
தாம்பரம் பகுதியையடுத்து, முடிச்சூர் மற்றும் சிடிஓ காலணி உள்ளிட்ட பல்வேறு இடங்களை மத்தியக் குழுவினர் ஆய்வு செ்ய்தனர். இன்று கடலூர் செல்லும் மத்தியக் குழுவினர் நாளை சென்னை மற்றும் திருவள்ளுர் பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications