அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமே இல்லை- முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் 'பொளேர்'
மிருகவதை தடுப்பு சட்ட திருத்தத்துக்கு அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது என்கிறார் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்.
சென்னை: மிருகவதை தடுப்பு சட்ட திருத்தத்துக்கான அவசர சட்டத்தை கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரமே இல்லை; மத்திய அரசுதான் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு நிரந்தர தீர்வு காண கோரி தமிழகமே புரட்சியில் இறங்கியுள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருக்கும் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் ஒன்றை அவசர சட்டம் மூலம் கொண்டு வருவதாகவும் இதனால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் கூறியுள்ளதாவது:
மத்திய, மாநில அரசுகளுக்கான பொதுப்பட்டியலில்தான் மிருகவதை தடுப்புச் சட்டம் இருக்கிறது. இச்சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவர மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது.
மாநில அரசுக்கு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அதிகாரமே இல்லை. மிருகவதை தடுப்புச் சட்டத்தில் எவையெல்லாம் வதைகள் இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இறைச்சியாக உண்ணுதல், பலியிடுதல், லாடம் கட்டுதல், மூக்கணாங்கயிறு குத்துதல் ஆகியவை வதை இல்லை என மிருகவதை தடுப்புச் சட்டம் கூறுகிறது. அதில் திருத்தம் கொண்டு வந்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.
ஆகையால் மத்திய அரசுதான் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அது செல்லுபடியாகும்.
இவ்வாறு நீதிபதி ஹரிபரந்தாமன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications