காட்சிப்படுத்தும் விலங்குகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறது காளை: ஜல்லிக்கட்டுக்கு வாய்ப்பு?
சென்னை: பழக்கப்பட்ட விலங்கினை காட்சிப்படுத்துவது என்ற பட்டியலில் இருந்து காளையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் விலங்குகள் வதைக்கப்படுவதாக கூறி பிராணிகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது.

இதனிடையே, தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி பொங்கல் விழா வருவதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழர் திருநாளான பொங்கலில் நடைபெறும் ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கும் பொருட்டு மத்திய அரசின் அதிகாரிகளை சந்திக்க தமிழக அரசின் அதிகாரிகள் குழு நேற்று டெல்லி சென்றனர். அதில், தமிழகத்தின் கால்நடைத்துறையின் செயலாளர் விஜயகுமார், இயக்குநர் ஆபிரஹாம் மற்றும் கூடுதல் இயக்குநர் அயூப் ஆகிய மூவர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள், டெல்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளர் அசோக் லவாசா மற்றும் கூடுதல் செயலாளர் எம்.பாண்டே ஆகிய இரு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில், ஜல்லிகட்டு நடத்த தடையாக இருக்கும் விலங்குகளின் பட்டியலில் காளை மாடுகளை நீக்க வேண்டி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், இதை கடைசி நேரத்தில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என மத்திய அரசின் அதிகாரிகள் கைவிரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, ஜல்லிகட்டு மீதான தடையை நீக்குவதில் எந்த முன்னேற்றமும் கிட்டவில்லை என்பதால், தமிழக அதிகாரிகள் செய்தியாளர்களிடமும் பேசாமல் சென்னை திரும்பினர்.
இந்நிலையில், பழக்கப்பட்ட விலங்கினை காட்சிப்படுத்துவது என்ற பட்டியலில் இருந்து காளையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இரண்டு நாளில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications