4ம் வகுப்பு மாணவர்களுக்கு சூடத்தால் சூடு.. ஆசிரியை சஸ்பெண்ட்.. வழக்குப் பதிவு!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவர்களின் காலில் சூடத்தால் சூடு வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் வைஜெயந்தி மாலா. அவர் சரியாகப் படிக்காத நான்காம் வகுப்பு மாணவர்கள் 15 பேரின் காலில் சூடத்தால் சூடு போட்டுள்ளார். இதனால் மாணவர்கள் வலியில் துடித்துள்ளனர். காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
வீடு திரும்பிய அவர்களின் காலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்கள் போராட்டத்திலும் குதித்தனர். இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஆசிரியை மீது தவறு இருப்பது தெரிய வந்ததை் தொடர்ந்து தற்போது அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஆசிரியையின் செயலைக் கண்டிக்கத் தவறிய தலைமை ஆசிரியர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியை மீது போலீஸில் புகார் தரப்பட்டது. அதையடுத்து ஆசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.