ஜெயலலிதாவுக்காக சோகம் காண்பித்து "சந்தோஷத்துடன்" கலைந்து சென்ற கருமேகங்கள்!
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் இன்று காலை பல பகுதிகளில் வானம் கருமேகக் கூட்டத்துடன் காணப்படுகிறது. ஜெயலலிதா தீர்ப்பால் வானமே சோகமாகக் காணப்படுகிறதோ என்று கூட மக்கள் நினைத்தார்கள். ஆனால் தீர்ப்பு வந்த பிறகு தற்போது மேகங்கள் கலைந்து வெயில் மெல்லத் தலை காட்டியிருக்கிறது.
வழக்கத்தை விட இந்தாண்டு கோடையின் கொடுமை சற்று முன்னதாகவேத் தொடங்கி விட்டது. கடந்த வாரம் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் மேலும் வெப்பம் அதிகரித்தது. தமிழகத்தின் பல பகுதிகள் கோடை மழையால் குளிர்ந்த போதும், சென்னைக்கு மட்டும் மழை பாராமுகமாகவே இருந்தது.
தொடர்ந்து வெயிலின் உக்கிரம் அதிகரித்து வந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். அதிக வெயிலால் பகல் நேரங்களில் வெளியே செல்ல அஞ்சி மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். பகலின் வெப்பம் இரவு நேரத்திலும் எதிரொலித்தது. இதனால் மக்கள் புளுக்கத்தில் தவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் கருமேகக் கூட்டத்துடன் காணப்பட்டது.. இதனால் சற்று குளிர்ந்த காற்று வீசியது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் காணப்படும் கருமேகத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே அதிமுகவினரைப் போலவே வானம் அதனைக் கொண்டாட அல்லது கதறித் தீர்க்கத் தயாராகிறதோ என மக்கள் கூட நினைத்தனர். எது எப்படியோ, அழுது தீர்த்தாலும் சரி, ஆனந்தக் கூத்தாடினாலும் சரி மழை பெய்தால் நல்லது என்பது தான் சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் தற்போது மேகங்கள் கலைந்து வெயில் வர ஆரம்பித்துள்ளது.