தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... சென்னை சூடாதான் இருக்கு.. ஆனால் மேகமூட்டம் இருக்குமாம்!
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்தரி வெயில் விடை பெற்ற போதும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்கிறது. ஆனால், சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோபிசெட்டிப்பாளையத்தில் 9 சென்டி மீட்டர் மழை பெய்தது. தொடர்ந்து அவினாசி 6, பெருந்துறை 5, மருங்காபுரி, மேட்டூர், திருமங்கலம் மற்றும் ஓசூர் 4 சென்டி மீட்டர் மழை பெய்தது. தொடர்ந்து வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தை பொருத்த வரையில் வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
தென்தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அக்னிநட்சத்திரம் என்ற கத்திரிவெயில் முடிந்தாலும் வெப்பத்தின் அளவு அதிகபட்சமாக 36 டிகிரியும், குறைந்தபட்சம் 29 டிகிரியும் பதிவாக வாய்ப்பு உள்ளது. மாலை வேளையில் இதமான காலநிலை சூழல் நிலவும்' என்றார்.












Click it and Unblock the Notifications