தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யலாமாம்.. சென்னைக்கு வெயில்தானாம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. இந்த வருடம் தென் மேற்கு பருவமழை சற்று தாமதமாகத் தொடங்கியது.
கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. நேற்று முன்தினம் முதல் தமிழ்நாட்டில் எங்கும் குறிப்பிட்ட அளவுக்கு மழை இல்லை. மாறாக வெயில்தான் கொளுத்தி மக்களை வாட்டி வதைக்கின்றது.
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன், தமிழ்நாட்டில் வெப்பம் இந்த வார இறுதியில் அதிகரிக்கும் சூழ்நிலை இல்லை. இப்போது உள்ள வெப்பம்தான் தொடர்ந்து இருக்கும்.
ஒருவேளை குறையலாம். ஆனால் அதிகரிக்க வாய்ப்பில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வறண்ட வானிலைதான் நிலவும் என்று கூறியுள்ளார்.