தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னைக்கு மேகமூட்டம் மட்டும் தான்!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டது. இதனால் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகமாகவே இருந்து வருகிறது. ஒரு சில நகரங்களில் நேற்று சராசரியாக 100 டிகிரி வரை வெப்பம் பதிவானது.
இதனால் எப்போது தங்கள் பகுதிகளிலும் மழை பெய்து, வெப்பம் தணியும் என மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
மழை நிலவரம்...
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி, நாகர்கோவில் 6 செ.மீ., தக்கலை 5 செ.மீ., குளச்சல் 4 செ.மீ., நடுவட்டம், பூதப்பாண்டி, குழித்துறை, மயிலாடி, கூடலூர் பஜார் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., மழை பதிவானது.
மேகமூட்டம்...
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 98.6 டிகிரியும், குறைந்தபட்சம் 82.4 டிகிரியும் வெப்பம் பதிவாக கூடும்.
வெப்பத்தின் தாக்கம்...
வெப்பம் குறைவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. தரைகாற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீசுகிறது.
கடல் காற்று...
அதேபோல் கடல் காற்றைப் பொருத்தவரையில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறது. இதனால் ராமேசுவரம், கன்னியாகுமரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக கடலுக்கு சென்று திரும்ப வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.