20 தமிழர்கள் சுட்டுக்கொலை: ஹெரிட்டேஜ் சூப்பர் மார்க்கெட் முற்றுகை! நாயுடு படத்திற்கு செருப்படி!!
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் ஹெரிடேஜ் ஃபிரஷ் அங்காடியை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்திய மே 17 இயக்கத்தை சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர அரசு மற்றும் போலீசை கண்டித்து மே 17 இயக்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர். பால் பொருட்களை கொட்டியும் சந்திரபாபு நாயுடு உருவ படத்தை செருப்பால் அடித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறை சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த படுகொலைக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவே உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த போலி என்கவுண்டர் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினரும் தமிழ் ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள ஹெரிட்டேஜ் ப்ரஷ் சூப்பர் மார்க்கெட்டை நேற்று மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட்டனர்.

தமிழர்கள் அனைவரும் இந்த ஹெரிடேஜ் நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கோரிக்கை விடுத்தார்.

அப்போது ஹெரிடேஜ் பாலை சாலையில் கொட்டினர். சந்திரபாபு நாயுடுவின் படத்தை செருப்பால் அடித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

வியாழக்கிழமையன்று மயிலாப்பூரில் உள்ள ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டது. இந்தநிலையில் தி.நகரில் உள்ள ஹெரிடேஜ் நிறுவனமும் சூறையாடப்பட்டதால் சென்னையில் உள்ள ஹெரிடேஜ் நிறுவனங்களின் முன்னர் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆந்திரா வங்கி முற்றுகை
இதனிடையே 20 தமிழக கூலித் தொழிலாளர்களை சட்டத்திற்கு புறம்பாக சுட்டுக்கொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து மதுரையில் நேற்று ஆந்திரா வங்கி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கம், நாணல் நண்பர்கள், தமிழ்தேசிய பேரியக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் தமிழர் இயக்கம், ஆதித்தமிழர் பேரவை தமிழர் களம், தமிழ் மாணவர் இயக்கம் மற்றும் மே17 இயக்கத்தினரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications