கலால் வரியை உயர்த்திய புதுச்சேரி அரசு.. விஸ்கி, பிராந்தி விலை விர்.. குடிமகன்கள் உர்..!
புதுச்சேரி அரசின் கலால் வரித்துறை திடீரென்று கலால் வரியை அதிகரித்துள்ளதால் மதுபான விலை உயர்ந்தது.
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கலால் வரித்துறை திடீரென்று கலால் வரியை அந்த யூனியன் பிரதேசத்தில் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது . இதற்கான ஆணையை புதுச்சேரி அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இது திடீர் கலால் வரி உயர்வால் புதுச்சேரியில் விலைகள் அதிகரித்துள்ளது. அதன்படி அங்கு மதுபானத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து அதிகரிக்கப்பட்ட வரியுடன் புதிய விலை நிலவரம் புதுச்சேரி அரசாங்கத்தால் இன்று வெளியிடப்பட்டது. இது மதுபானப் பிரியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலை குறைவான புதுச்சேரி
மதுபானங்களுக்கு பெயர் பெற்ற புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளுகடைகள் உள்ளன. புதுச்சேரியில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இவற்றை ருசித்து பார்க்க ஏராளமான வெளியூர் மற்றும் உள்ளூர்வாசிகள் இருப்பதால் புதுச்சேரிக்கு என்று தனி மதுபிரியர்கள் உள்ளனர். இங்கு மிகவும் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

கலால் வரி
இந்த நிலையில் புதுச்சேரி அரசு கலால்துறை, திடீரென்று கலால்வரியை உயர்த்தி இருக்கிறது. இதற்கான ஆணையை இன்று புதுச்சேரி அரசு வெளியிட்டது. இதன்படி அனைத்து பொருட்களின் விலையும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை கலால்வரி உயர்த்தப்பட்டு சீரமைக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் கலால் வரி சீரமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விலை நிலவரம்
இதனால் விஸ்கி, ரம், பிராந்தி போன்றவைகளை அடிப்படை விலையான ரூ. 68-ல் இருந்து ரூ.75க்கும், ரூ. 78-ல் இருந்து 90க்கும், ரூ. 85-ல் இருந்து 100-க்கும் உயர்த்தி உள்ளது. அதே போல் பீர் விலையை ரூ. 4.50ல் இருந்து ரூ.6-க்கும், ஓயின் விலையை ரூ. 15ல் இருந்து ரூ.20-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. கலால் வரியால் ரூ. 2 முதல் 20 வரை மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. புதிய விலை பட்டியல் மதுபானகடைகளில் அமலுக்கு வந்துள்ளது.

விற்பனை குறையும்
திடீரென உயர்த்தப்பட்ட மதுபான விலையால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கலால்துறைவரி உயர்வு காரணமாக மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து விற்பனை பாதிக்கப்படும் என்றும், வருடத்திற்கு 3 முறை கலால்வரி ஏற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று மதுபான கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications