சாருநிவேதிதா கனவில் வந்த சசிகலா புஷ்பா... மனுஷ்யபுத்திரனை அடித்ததாக பஞ்சாயத்து!
சென்னை: எழுத்தாளர் சாருநிவேதிதா தம்முடைய கனவில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா வந்ததாகவும் அவர் டெல்லி விமான நிலையத்தில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனை அடித்தது போன்று நிகழ்ந்ததாகவும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாருநிவேதிதா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 'இரண்டு கொடுங்கனாக்கள்' என்ற தலைப்பில் நேற்று ஒரு பதிவை எழுதியுள்ளார். அந்த 2 கனவுகளிலும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனே வந்து போகிறார்.
தம்முடைய 2-வது கனவில் சர்ச்சைக்குரிய சசிகலா புஷ்பா வருவது பற்றி எழுதியிருப்பதாவது:
இது இன்று மதியம் அரைத்தூக்கத்தில் கண்ட கொடுங்கனா. மனுஷ் அரசியலில் குதித்தது பற்றி என் மனதில் பட்டதைச் சொல்லியிருந்தேன். டைம்ஸ் ஆஃப் இந்தியா. பெயர் குறிப்பிடாமல் சொல்லியும் எல்லோருக்கும் அது மனுஷ் என்று தெரிந்து விட்டது போல. இந்தக் கிசுகிசு எழுத்தாளர்கள் மேல் பொறாமையே உண்டாகிறது. எப்படித்தான் எதுவுமே கண்டு பிடிக்க முடியாமல் எழுதுகிறார்களோ! நான் அந்தக் கட்டுரையாளரிடம் தெரிவித்த கருத்துக்கு மனுஷ் மறுப்பு மாதிரி ஒன்றை எழுதியிருக்கிறார். மாதிரி இல்லை. மறுப்புதான். (எதுக்கு வம்பு?) அதில் அவர் தெரிவித்திருந்த ஒரு கருத்து பிரமாதமாக இருந்தது.
அரசியலில் குதித்த பின்னர்தான்..
"அரசியலில் குதித்த பிறகுதான் மிக அதிக அளவில் எழுதுகிறேன்." உண்மைதான். ஒரு கவிஞன் தன் வாழ்நாள் முழுவதும் எழுதக் கூடிய கவிதைகளை மனுஷ் ஆறு மாதங்களில் எழுதுகிறார். ஒன்றுமே சோடை போகவில்லை. வீரியம் கூடிக் கொண்டேதான் போகிறது.
இதுதான் கனவு
என்ன இது? எப்படிப் புரிந்து கொள்வது இதை? மிகவும் எளிது. நான் கண்ட கொடுங்கனாவைச் சொல்கிறேன். இடம் தில்லி விமான நிலையம். பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் மனுஷ் வாரம் ஒருமுறை தில்லி செல்ல வேண்டியிருக்கிறது. அப்படிச் செல்லும் போது ஒருநாள். தில்லி விமான நிலையம்.
மனுஷ்யபுத்திரனை அடித்த சசிகலா புஷ்பா
மனுஷின் விமானத்திலேயே வந்து இறங்குகிறார் சசிகலா புஷ்பா. கொஞ்ச நேரத்தில் விமான நிலையத்தில் களேபரம். சசிகலாவின் குரலுக்கு மேலாக எகிறி அடிக்கிறது மனுஷின் குரல். எப்படி நீங்க என்னை அடிக்கலாம். உங்களை சும்மா விட மாட்டேன். இன்றைக்கே பத்து கவிதை எழுதுகிறேனா இல்லையா பாருங்கள்.
மனுஷ்யபுத்திரன் சபதம்
வாணிஸ்ரீ கவிதையை விட சசிகலா புஷ்பா கவிதை எப்படிப் போகிறது என்று பாருங்கள். இதைக் கேட்கும் சசிகலா புஷ்பா ஏதோ மனுஷ் தன்னை மிக மோசமாகத் திட்டி விட்டது போல் அதிர்ச்சியாகிப் பார்க்கிறார். இந்தக் கனவுதான் என் இன்றைய மதியத் தூக்கத்தில் வந்தது. நிச்சயமாகக் கொடுங்கனா தான் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இங்கே ஜெயமோகன் அங்கே சசிகலா புஷ்பா
கனா முடிந்ததும் முன்பு கேட்ட குழப்பத்திற்கும் விடை கிடைத்து விட்டது. எப்பேர்ப்பட்ட பைத்தியக்காரத்தனமான சூழல் பாருங்கள். இங்கே மனுஷோடு சண்டை போட ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும். அங்கே அரசியலில் சண்டை போட சசிகலா புஷ்பா. இந்த madness-ஐ ஒரு கவிஞன் எப்படிக் கடப்பான் என்று தயவுசெய்து சொல்லுங்கள்.
பைத்தியகாரத்தனம்
கவிதை எழுதி கவிதை எழுதி கவிதை எழுதி கவிதை எழுதித் தானே இந்தப் பைத்தியக்காரத்தனத்தைத் தீர்க்க முடியும்? வேறு எந்த வகையில் தீர்ப்பது?
கவிதை காப்பாற்றுகிறது..
என்னை நீங்கள் வலுக்கட்டாயமாக பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் போடுங்கள். மனுஷை விட அதிக அளவில் அதே வீர்யத்தில் கவிதை எழுதிக் காட்டுகிறேன். கவிதை எழுதாவிட்டால் நானும் அங்கேயுள்ள பைத்தியங்களில் ஒரு பைத்தியமாக ஆகி விட மாட்டேனா? கவிதைதானே ஐயா நம்மையெல்லாம் காப்பாற்றுகிறது? புரிகிறதா, இதை விட விளக்கமாகச் சொல்ல வேண்டுமா?
இவ்வாறு சாருநிவேதிதா எழுதியுள்ளார்.