மக்களைக் குடிக்கச் சொல்லும் கட்சிகளை துரத்தியடிப்போம் - ராமதாஸ் ஆவேசம்
திண்டிவனம்: மதுவை குடிக்கச் சொல்லும் கட்சிகளை துரத்தியடிக்கும் காலம் வந்து விட்டது. இதை செய்யும் முழுப் பொறுப்பும் பெண்களிடம் உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார்.
திண்டிவனம் சட்டசபைத் தொகுதி பாமக மகளிர் சங்க அரசியல் எழுச்சி மாநாடு திண்டிவனத்தில் நடந்தது. அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது மதுக் கொடுமை குறித்து அவர் ஆவேசமாக பேசினார்.
மதுவால் சீரழியும் குடும்பங்கள் குறித்து உருக்கமாக பேசினார். பெண்களை விதவைகளாக மாற்றும் குடிப்பழக்கத்தை கடுமையாக சாடினார்.
டாக்டர் ராமதாஸின் பேச்சிலிருந்து....

பெண்களை விதவைகளாக்கும் குடி வெறி
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம்பெண்கள் அதிக விதவைகளாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் மதுதான்.

குடிக்கச் சொல்வோரை அப்புறப்படுத்துவோம்
மதுவை குடிக்க சொல்கிற கட்சிகளை அப்புறப்படுத்தும் காலம் வந்தாச்சு. இதையெல்லாம் மாற்றும் முழுபொறுப்பு பெண்களிடம் உள்ளது.

ஓட்டுக்காக கெளரவத்தை விற்காதீர்கள்
தேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்கள் கொடுக்கிற பணத்தை வாங்கிவிட்டு கவுரவத்தையோ, நட்பையோ விற்றுவிடாதீர்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பகுதியிலும், எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற வாசகத்தையும், மானம், மரியாதையுடன் வாழ்கிறோம் என்ற வாசகத்தையும் பலகையில் எழுதி தொங்கவிடுங்கள்.

மதுவைக் கொடுத்து ஏழையாக்குகிறார்கள்
தமிழ்நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்கு பதிலாக மதுவை கொடுத்து ஏழையை ஒழிக்கிறார்கள். மதுவை ஒழிக்க வேண்டும் என 30 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது.

13 வயது மாணவன் மது அருந்தும் கொடுமை
கடந்த காலங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மது குடித்தார்கள். ஆனால் தற்போது பள்ளியில் படிக்கின்ற 13 வயது மாணவன் மது குடிக்கிறான்.

எங்களை கோட்டையில் உட்கார வையுங்கள்
ஒரு முறை பா.ம.க.விற்கு வாக்களித்து கோட்டையில் உட்கார வையுங்கள். முதல்வரானதும், மதுவை ஒழிப்பது தான் முதல் கையெழுத்தாக போடுவோம். பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். இதன் மூலம் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறையும்.

கட்டாயக் கல்வி, கட்டணமில்லாத கல்வி தருவோம்
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய கல்வி, கட்டணமில்லா கல்வி, சுமையில்லா கல்வியை இலவசமாக கொடுப்போம்.

பாமக ஆட்சி வந்தால் தமிழகம் வளரும்
சிறந்த மருத்துவ சிகிச்சை, விவசாயிகளுக்கு விதை, மருந்து, உரம் உள்ளிட்டவைகளை இலவசமாக கொடுப்போம். இதன் மூலம் தமிழ்நாடு வளர்ச்சியடையும் என்றார் டாக்டர் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications