வீடு காலி செய்து தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: அமைச்சர் காமராஜ் மீதான வழக்கு தள்ளிவைப்பு
சென்னை: வீடு காலி செய்து தருவதாகக் கூறி ரூ. 15 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக அமைச்சர் காமராஜ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஏப்ரல் 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவலச்சேரியைச் சேர்ந்த எஸ்.வி.எஸ். குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். சென்னை மயிலாப்பூர் சிருங்கேரிமடச் சாலையில் ஒரு வீடு வாங்கினேன். அந்த வீட்டின் உரிமையாளர் வீடு காலி செய்வதற்கு அவகாசம் கோரினார். அவர் கேட்டுக் கொண்டபடி அவருக்கு காலஅவகாசம் வழங்கினேன். ஆனால் அவர் வீட்டை காலி செய்யவில்லை. அதன் பிறகு அவரை வீட்டில் இருந்து காலி செய்வதற்காக நீதிமன்றத்தை அணுக முயன்றபோது வக்கீல் ராமகிருஷ்ணன் என்பவரை சந்தித்தேன். இதுபோன்று வீடு காலி செய்வது தொடர்பாக நாங்கள் ஒரு குழுவாக செயல்படுகிறோம் என அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரது உறவினர் என்று காமராஜை அறிமுகம் செய்து வைத்தார்.
அவர்கள், வீட்டை காலி செய்வது தொடர்பாக முதலில் ரூ. 10 லட்சமும், பிறகு ரூ. 5 லட்சம் கேட்டனர். அவர்கள் கேட்டத் தொகையைக் கொடுத்தேன். ஆனால் வீட்டைக் காலி செய்ய அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நன்னிலம் தொகுதி எம்எல்ஏவாக காமராஜ் வெற்றி பெற்று அமைச்சர் ஆனார்.
இந்த நிலையில் பணம் ஏமாற்றியது தொடர்பாக கடந்த 3ம் தேதி மன்னார்குடி டிஎஸ்பியிடம் புகார் அளித்தேன். அவர் என்னிடமிருந்து அனைத்து உண்மையான ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு என்னை மிரட்டினார். இதையடுத்து காமராஜும், ராமகிருஷ்ணனும் எனது வீட்டுக்கு ரவுடிகளை அனுப்பி என்னைத் தாக்கினர். கொலை செய்துவிடுவதாக மிரட்டிச் சென்றனர். இது தொடர்பாக நான் அளித்த புகார் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பி.என். பிரகாஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் வழக்கை ஏப்ரல் 24ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications