செம்பரம்பாக்கம், மணிமங்கலம் ஏரிகள் திறப்பு- அடையாறு கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம்
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் மற்றும் மணிமங்கலம் ஏரிகள் நிறைந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் அப்படியே மறுகாலாக திறந்து விடப்படுகிறது. இந்த ஏரி நீர் அடையாறு ஆற்றில் கலப்பதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிமங்கலம் ஏரி
இதேபோல் சென்னை புறநகரில் உள்ள மணிமங்கலம் ஏரியும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டு அதுவும் அடையாறு ஆற்றில் கலந்து வருகிறது.

இந்த ஏரியின் ஒரு பகுதியில் கரை உடைந்ததால் வண்டலூர்- ஒரகடம் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீரும் அடையாறில் வெள்ளமாக வெளியேறி வருவதால் இப்பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

சென்னையில் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்கனவே சென்னை அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் மற்றும் மணிமங்கலம் ஏரிகள் நீரும் திறந்துவிடப்படுகின்றன. இதனால் சென்னையில் அடையாறு கரையோர பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, போரூர், ஈக்காட்டுதாங்கல், கோட்டூர்புரம், அடையாறு உள்ளிட்டவை தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கும் நிலை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications