நள்ளிரவில் திக்திக்! காவலர்களை தாக்கி, தப்ப முயன்ற ரவுடி தணிகா.. சுட்டு பிடித்த செங்கல்பட்டு போலீஸ்
செங்கல்பட்டு: போலீசாரை தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற பிரபல ரவுடி தணிகா என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இதனால் நள்ளிரவில் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் நிலவும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கத் தமிழ்நாடு போலீசார் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ரவுடிஸத்தை கட்டுப்படுத்தவும் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே செங்கல்பட்டில் போலீசார் தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற A+ ரவுடி ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி தணிகா என்கிற தணிகாச்சலம். இவரை போலீசார் A+ ரவுடியாகவே அறிவித்துள்ளனர். இவரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்றைய தினம் செங்கல்பட்டில் இவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவரை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையிலும் இறங்கினர்.. அப்போது ரவுடி தணிகா போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்றுள்ளார்.
இதையடுத்து பாதுகாப்பிற்கு வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் ரவுடி தணிகாவை சுட்டுப்பிடித்தனர். இதில் அவருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி தணிகாவுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
ரவுடி தணிகா என்ற தணிக்காசலம் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உட்பட 20+ வழக்குகள் நிலுவையில் உள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தணிகாவை பல காலமாகவே போலீசார் தேடி வந்தனர்.












Click it and Unblock the Notifications