வகுப்பறையில் கணினி ஆசிரியையை தாக்கி காதைக் கிழித்த மாணவர்... சென்னையில் பரபரப்பு
சென்னை : சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ மாணவர் ஒருவர் கணினி ஆசிரியை மீது தாக்குதல் நடத்தியதில் ஆசிரியியையின் காது ஜவ்வு கிழிந்து போனது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார் புளியந்தோப்பு வ.உ.சி. பகுதியைச் சேர்ந்த லட்சுமி (36). வழக்கம் போல நேற்று பள்ளி சென்ற லட்சுமி, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ஆகாஷ் என்ற மாணவர் திடீரென கணினியை ஆப் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை லட்சுமி கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ஆகாஷ், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் லட்சுமியை கன்னத்தில் அடித்துள்ளார்.
இதனால், காது வழியால் அவதிப்பட்ட லட்சுமி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு, அவரின் காது ஜவ்வு கிழிந்து போயுள்ளதாகவும், அதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆசிரியை லட்சுமி மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி துறை அதிகாரி சுவாமிநாதன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
ஏற்கனவே, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மாணவன் ஆகாஷ் வேறொரு ஆசிரியரைத் தாக்கியுள்ளார். அதற்கு மன்னிப்பு கடிதம் வழங்கியதால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஆசிரியையை தாக்கியதால், ஆகாஷை பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆசிரியர் மீது மாணவர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மற்ற மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன்பு குவிந்ததால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தமிழகத்தில் வகுப்பறைகளில் கொலைகளும், தாக்குதல்களும் நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து வகுப்பறைகளில் கொலை செய்யப்பட்டனர். மேலும் சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரை, ஒரு மாணவரின் தந்தை அனுப்பிய கூலிப்படையினர் விரட்டி விரட்டித் தாக்கிய பயங்கரமும் நடந்தது.
இந்த நிலையில் சென்னை அருகே வகுப்பறையில் வைத்து ஆசிரியையை மாணவர் தாக்கிய செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications