கார் எரிந்து ஆடிட்டர் குடும்பம் பலியானது ஏன்.. திடுக் திருப்பம்.. பரபர பின்னணி
கார் எரிந்து ஆடிட்டர் குடும்பம் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாமல்லபுரம்: ஆடிட்டர் ஜெயதேவன், அவரது மனைவி, மகள் ஆகியோர், கார் எரிந்து பலியாகவில்லை. அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குரோம்பேட்டையை சேர்ந்தவர் 55 வயதான ஜெயதேவன். ஆடிட்டரான இவருக்கு ரமாதேவி என்ற மனைவியும், திவ்யஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 27-ந் தேதி 3 பேரும் காரில் சுற்றுலா செல்வதாக பக்கத்து வீட்டாரிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளனர். அன்று இரவு மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே உள்ள தனியார் வீட்டுமனை காலி இடத்தில் திடீரென அவர்களது கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகிய 3 பேரும் உடல் கருகி சாம்பலானார்கள்.
தீவிர விசாரணை
இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். கார் ஏசியால் தீப்பிடித்ததா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
புதுமணத் தம்பதியர்
இந்த விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, ஆடிட்டர் மகள் திவ்யஸ்ரீக்கும், பதன் கோட்டில் ராணுவ கேப்டனாக பணியில் இருக்கும் சரத் என்பருக்கும் இடையே கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.
சண்டை சச்சரவு
புதுமணத் தம்பதியரிடையே தொடர்ந்து சண்டை சச்சரவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யஸ்ரீ பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
மன வேதனை
இதுதொடர்பாக தாம்பரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் திவ்யஸ்ரீயின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசும்படி அறிவுறுத்தி இருந்தனர். இதனால் ஜெயதேவன் குடும்பத்தினர் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தற்கொலை
இந்நிலையில் அவர்களின் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற முடிவிற்கு போலீசார் வந்தனர்.
கணவரிடம் விசாரணை
இதுதொடர்பாக திவ்யஸ்ரீயின் கணவரான ராணுவ கேப்டன் சரத்திடம் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமணி விசாரணை நடத்தினார். அவரும் பல தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையை அடுத்து, ஆடிட்டர் உள்ளிட்ட மூவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கார் விபத்து என்று விசாரிக்கத் தொடங்கியதில் தற்கொலை என தகவல் வெளியானதால் உறவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.