சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து - பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை: சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே இன்று காலை தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
பெங்களூருவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தது 12692 - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில். இன்று காலை 4.30 மணியளவில் இந்த ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயில் டிரைவர் ரயிலின் பாதையை மாற்றினார்.

அப்போது என்ஜின் மற்றும் முதல் 2 பெட்டிகள் சரியாக பாதை மாறின. ஆனால், அதனைத் தொடர்ந்து வந்த 3 மற்றும் 4வது பெட்டிகள் எதிர்பாராத விதமாக தடம் புரண்டன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ரயில் பெட்டிகளில் இருந்து வெளியேறினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்தனர். 3 மணி நேரத்திற்குப் பின்னர் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப் பட்டது. பின்னர் அந்த ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப் பட்டது.
யாருக்கும் காயம் இல்லை - கோட்ட மேலாளர்
இந்த விபத்து குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் அனுபம் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பெங்களுருவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பெங்களுரு மெயில் எக்ஸ்பிரஸ், புதன்கிழமை காலை 4.30 மணி அளவில் பேசன் மேம்பாலம் அருகே டிராக் மாற்ற முற்பட்டபோது இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. கடைசியாக இருந்த இரண்டு ஏ.சி.பெட்டிகள் தடம் புரண்டது.

மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றன. உயர் அதிகாரிகளும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகளுக்கு அவர்கள் உதவி செய்தனர்.
விபத்தில் சேதமடைந்த பெட்டிகளில் பயணித்தவர்கள் மற்ற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர். ரயில் தடம் புரண்டதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications