காணும் பொங்கல்… சென்னையில் உற்சாகக் கொண்டாட்டம்… கடற்கரை, பூங்காக்களில் அலை மோதும் கூட்டம்
சென்னையில் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடற்கரை, பூங்காக்கள், சினிமா திரையரங்கம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னை: பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான காணும் பொங்கல் சென்னையில் களைகட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

அலைமோதும் மெரினா கடற்கரை
காணும் பொங்கலை கொண்டாட இன்று காலையில் இருந்தே மெரினா கடற்கரைக்கு மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடி வருகின்றனர். கடற்கரையில் மக்களுக்கு அசம்பாவிதம் ஏதுவும் நடைபெறமால் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெரிசலில் பூங்காக்கள்
அண்ணா உயிரியல் பூங்கா, செம்மொழிப் பூங்கா, கிண்டி பூங்கா, காந்தி மண்டபம் என அனைத்து பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பொங்கல் புத்தாடைகளை உடுத்தி கரும்பு உள்ளிட்ட திண்பண்டங்களோடு பூங்காவிற்கு சென்று பொழுதுபோக்கி வருகின்றனர்.

திணறும் திரையரங்குகள்
இதே போன்று திரையரங்குகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. முன்பதிவு செய்து திரையரங்குகளில் படம் பார்க்க சென்றவர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திரைப்படத்தை பார்த்து வருகின்றனர். கடைசி நேரத்தில் படம் பார்க்க செல்வோருக்கு டிக்கெட் கிடைக்காமல் வாசலில் நிற்பதையும் பார்க்க முடிகிறது.

பொழுது போக்கு பூங்கா
தாம்பரம் கிஷ்கிந்தா, குயின்ஸ் லேண்ட், விஜிபி தங்கக்கடற்கரை, எம்ஜிஎம் என பொழுது போக்கு பூங்காக்களிலும் பொதுமக்கள் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இந்த இடங்களில் பொங்கல் திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் பாதுகாப்பு
பொதுமக்கள் அதிகம் குவியும் மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை, கிண்டி பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதுகாப்பு பணியில் சுமார் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications