மீண்டும் ஒரு மழை நாளில்... சென்னை!
சென்னை: சென்னைவாசிகள் ஒவ்வொருவராலும் மறக்க முடியாதது இந்த ... மழை. கடந்த ஆண்டு இறுதியில் அத்தனை பேரையும் புரட்டிப் போட்டுச் சென்ற மழை, இதோ நேற்று இரவு முதல் மீண்டும் சென்னையை துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருக்கிறது.
நகரிலும், புறநகர்களிலும் நேற்று இரவு முதல் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து பெய்கிறது, இடையில் ஒரு பிரேக் விடுகிறது, பிறகும் அது நீள்கிறது.. முடிவில்லாத வானம் போல.
ஒவ்வொரு மழை நாளையும் யாராலும் மறக்க முடியாது.. அதிலும் சென்னை மக்களின் ரத்தத்தோடு இந்த மழை நாட்களும் கலந்து போய் விட்டன.. மறக்க முடியாத நினைவுகளுடன்.
இதோ இந்த மழை நாளில்.. அந்த மழை நாட்கள் குறித்த ஒரு நினைவோட்டம்....

எங்கு பார்த்தாலும் தண்ணீர்
இன்று போலத்தான் அன்றும்.. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தண்ணீர் தண்ணீர். வெளியில் கால் வைத்தால் மூழ்கி விடுவோம்.. உள்ளுக்குள்ளோ முழங்கால் அடி உயரம் வரை தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தோம். இங்கே தேங்கிக் கிடக்கும் இந்த "குட்டி குளம்" அந்தப் பழைய "பெரிய குளத்தை" நினைவூட்டுகிறது.

குடை பிடித்து ஊர் சுற்றிப் பார்த்தோம்
அன்று.. கரண்ட் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, காய்கறி இல்லை, பால் இல்லை.. குடை பிடித்தும், குடை பிடிக்காமலும் தெருத் தெருவாக இப்படித்தான் கூட்டம் கூட்டமாக சுற்றி அலைந்தோம்... அக்கம் பக்கத்தினர் என்ன ஆனார்கள் என்பதை அறிய!

மூச்சை விட்ட வாகனங்கள்
இந்த மழையில் நம்மால் வாகனங்களைச் செலுத்த முடிகிறது. ஆனால் அன்று பெய்த மழையிலோ வாகனங்கள் மூழ்கி மூச்சை விட்டு சோக கீதம் பாடின. மூழ்கிப் போன கார்கள், டூவீலர்கள், சைக்கிள்கள் என எல்லா வாகனமும் அடித்துப் போன அந்த நாட்களை மறக்க முடியுமா?

படகோட்டிகளை எதிர்பார்த்து
இதோ இவர்கள் டூவீலரில் ஜம்மென்று ஜில்லிட வைக்கும் மழைத் துளியை ஊறுவி சிட்டாய் பறக்கிறார்கள். ஆனால் அன்றோ படகோட்டியுடன் படகு வரும் நிமிடத்திற்காக நாம் காத்திருந்தோம்.. மனம் நிறைய தவிப்புடன்.

அடடா எத்தனை வாகனங்கள்!
எத்தனை வாகனங்கள்.. மழையால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி.. ஆனால் அன்று மழையால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நின்றது வெள்ள நீர் மட்டுமே. மனிதர்களையும், வாகனங்களையும் ஓரம்கட்டிய அந்த பெரு வெள்ளம்தானே சாலை முழுவதும் மூழ்கடித்தபடி ஆர்ப்பரித்து ஓடியது.. மறக்க முடியுமா?

வாங்கப்பா, இது நம்ம மழைதான்
இங்கே பாருங்கள்.. இந்த மழைக்கே ஒதுங்கிக் காத்திருக்கும் மக்கள்.. இதை விட பெரிய மழை நம்மைப் புரட்டிப் போட்டதை மறந்து விட்டீர்களே மக்களே.. அட வாங்கப்பா நனைந்து திரிவோம்.. இது நம்ம மழைதான்!












Click it and Unblock the Notifications