ஜீன்ஸ் அணிந்ததற்காக கண்டிக்கப்பட்ட கல்லூரி மாணவர் பிளேடால் கையை கிழித்து தற்கொலை முயற்சி
சென்னை: சென்னை தியாகராய கல்லூரியில் ஜீன்ஸ் அணிந்து வந்ததற்காக முதல்வர் கண்டித்ததையடுத்து மாணவர் ஒருவர் பிளேடால் தனது கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். அவரது மகன் முருகன் வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராய கல்லூரியில் பி.காம். 3வது ஆண்டு படித்து வருகிறார். மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.
இந்நிலையில் முருகன் விதிமுறையை மீறி செவ்வாய்க்கிழமை ஜீன்ஸ் அணிந்து கல்லூரிக்கு சென்றார். அவரை பார்த்த வகுப்பு ஆசிரியர் அவரை கண்டித்ததுடன் முதல்வரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.
உடனே கல்லூரி முதல்வர் முருகனை அழைத்து கண்டித்தார். இதனால் மனமுடைந்த முருகன் முதல்வரின் அறைக்கு எதிரே நின்று தனது இடது கையை பிளேடால் கிழித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியதை பார்த்த சக மாணவர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரது கையில் மருத்துவர்கள் 5 தையல் போட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் கல்லூரிக்கு வந்தனர். கல்லூரியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டனர். மேலும் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.












Click it and Unblock the Notifications