ரூ.50க்காக 2 வயது குழந்தை தண்டவாளத்தில் அடித்து கொலை: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்!
சென்னை: 50 ரூபாய் கொடுக்காத ஆத்திரத்தில், உறவினரின் குழந்தையை கடத்திச் சென்று தண்டவாளத்தில் அடித்து கொலை செய்த வழக்கில், ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் - ஷைலா தம்பதியின் மகன் மோனிக் (2). ஆனந்தின் உறவினரான ஜுகுனு (எ) சந்திரகாந்த் அடிக்கடி ஆனந்த் வீட்டுக்கு வருவது வழக்கம்.
குழந்தை மோனிக்குடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு ஷைலாவிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் ஜுகுனு.
கடந்த 2008 செப்டம்பர் 25ஆம் தேதி ஆனந்த் வியாபார விஷயமாக வெளியூருக்கு சென்றபோது, வழக்கமாக வீட்டுக்கு வந்த ஜுகுனு குழந்தை மோனிக்குடன் விளையாடியுள்ளார். அப்போது, ஷைலாவிடம் தனக்கு ரூ.50 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஷைலா இல்லை என்று கூறியுள்ளார். உடனே கோபமான ஜுகுனு, குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியில் விளையாடச் செல்வதாக கூறி போய்விட்டார்.
குழந்தை திரும்ப வராமல் போகவே இதுகுறித்து யானைக்கவுனி காவல்துறையில் ஷைலா புகார் செய்தார். சிறிது நேரம் கழித்து போன் செய்த ஜுகுனு, குழந்தையை திருமுல்லைவாயிலுக்கும், அம்பத்தூருக்கும் இடையே ரயில் தண்டவாளத்தில் போட்டு கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அப்போது, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம், குழந்தையை உயிருடன் கொண்டு வா என்று ஷைலாவின் உறவினர்கள் ஜுகுனுவிடம் கெஞ்சியுள்ளனர். அதற்கு, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டான் என்று போன் இணைப்பை ஜுகுனு துண்டித்துவிட்டார்.
இதையடுத்து, ஷைலாவின் குடும்பத்தினர் உடனடியாக திருமுல்லைவாயில் ரயில் நிலையத்துக்கு சென்று தண்டவாளத்தில் இறங்கி குழந்தையை தேடினர். அங்கு குழந்தை மோனிக் தலை உடைந்து இறந்து கிடந்தான்.
ஜுகுனு சென்னையிலிருந்து தப்பி திருச்சிக்குச் சென்றுள்ளார். குழந்தை அணிந்திருந்த 11 கிராம் செயினை எடுத்து சென்ற அவர், அங்கு ஒரு அடகுக் கடையில் விற்று ரூ.10,800 வாங்கியுள்ளார். திருச்சியில் ஒரு சலூனுக்குச் சென்று மொட்டை அடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து மும்பை சென்றுள்ளார்.
இதையடுத்து, யானைக்கவுனி காவல்துறையினர் கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து ஜுகுனுவை தேடி வந்தனர். இந்நிலையில், மும்பையில் சந்தேக வழக்கில் ஜுகுனுவை 2009 நவம்பர் 1ஆம் தேதி கைது செய்த மும்பை காவல்துறையினர் யானைக்கவுனி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவரை சென்னை அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கில் 43 பேரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் கடத்தல் பிரிவில் ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும், கொலை வழக் கில் ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால் ஒவ்வொரு பிரிவுக்கும் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்.












Click it and Unblock the Notifications