சென்னைக்கு இப்போதைக்கு தண்ணீர் பிரச்சனை இல்லை – அதிகாரிகள் தகவல்
சென்னை: கோடை காலத்தில் சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சென்னை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததையடுத்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் விடப்பட்டது.
இதன் காரணமாக வீராணம் ஏரி நேற்று முழு அளவை எட்டியது.

தண்ணீர் பிரச்சனை:
தற்போது ஏரியின் நீர்மட்டம் 47.5 அடியாக உள்ளது. ஏரிக்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 77 கன அடி வீதம் தண்ணீர் விடப்படுகிறது. இது சென்னை குடிநீர் தேவையை சமாளிக்க உதவியாக உள்ளது.
பூண்டி ஏரிக்கு தண்ணீர்:
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி 420 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதிலும் ஓரளவு தண்ணீர் வந்துள்ளது.
வரத்து அதிகம்:
கடந்த 4 நாட்களில் மட்டும் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு 308 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து இருக்கிறது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி தற்போது 3 ஆயிரத்து 4 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த வருடம் இதே நாளில் 2 ஆயிரத்து 955 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது.
ஆழ்குழாய் கிணறுகள்:
இப்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உள்ள தண்ணீர், 2 மாதங்கள் தட்டுப்பாடு இல்லாமல் நகருக்கு வினியோகம் செய்ய போதுமானது. இது தவிர ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகம்:
சென்னை நகருக்கு முன்பு தினமும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இப்போது 575 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இப்போது இருக்கும் தண்ணீர் மூலம் 2 மாதங்கள் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க முடியும்.
தட்டுப்பாடு வராது:
வீராணம், கண்டலேறு தண்ணீரும் வருவதால் ஆகஸ்டு வரை குடிநீர் பிரச்சினை வர வாய்ப்பில்லை. அடுத்து தென்மேற்கு பருவமழை மூலம் தண்ணீர் கிடைக்கும். எனவே சென்னை நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications