மின்சார ரயில் சேவை தற்காலிக நிறுத்தம் - சென்ட்ரல், எக்மோரில் அலைமோதிய பயணிகள்
சென்னை மின்சார ரயில் சேவை பராமரிப்பு பணியின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
சென்னை: சென்னையிலிருந்து புறநகர்களுக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை பராமரிப்பு பணியின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்
சென்னை மின்சார ரயில் செல்லும் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடை பெற்று வருவதால் இன்று ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. செங்ல்பட்டிலிருந்து கடற்கரை வரை செல்லும் ரயில்கள், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதே போல் கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில்களும் எழும்பூரிலிருந்தே இயக்கப்படுகிறது.
சென்ட்ரலில் இருந்து எழும்பூர் வழியாக செல்லும் வெளியூர் ரயில்களும், எழும்பூரிலிருந்தே இயக்கப்படுகிறது. இதனால் எழுப்பூரில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதுவும் மிக குறைந்தளவே ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனையடுத்து வெளியூர் செல்லும் பயணிகளும் இந்த ரயில் சேவை மாற்றம் காரணமாக கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னை எழும்பூரில் மக்கள் நீண்ட நேரம் ரயிலுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் கூட்ட நெரிசலில் மக்கள் தவித்து வருகின்றனர். இன்று முழுவதும் பராமரிப்பு பணி நடைபெறும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், எழுப்பூர் ரயில் நிலையம் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்து வருகிறது.
ரயில் சேவை நிறுத்தம் குறித்து விவரம் அறியாத மக்கள் சென்ட்ரல், பீச், பார்க் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயிலுக்காக காத்துக்கிடக்கின்றனர். மேலும் போதிய முன்னறிவிப்பில்லாமல் இவ்வாறு மாற்றங்களை ரயில்வேத்துறையினர் மேற்கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை முற்றிலுமாக மறுத்துள்ள ரயில்வே நிர்வாகம் முன்பே இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளது.