4 பேரின் உயிரைப் பறித்த கட்டடத்தில் விதி மீறலா?.. கலெக்டர் ஆய்வு
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து நடந்த இடத்தில் ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: சென்னை வடபழனியில் தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் விதிமுறை மீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் உள்ள வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.

4 பேர் மரணம்
குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் தீ பற்றியுள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. அந்த தீ அங்கிருந்த வீடுகளுக்கும் பரவியது. இதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு 4 பேர் உறக்கத்திலேயே உயிரிழந்தனர்.

உயிருக்கு போராடும் ஐவர்
5 பேர் காயங்களுடன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனை டீன் வசந்தாமணி கூறியுள்ளார். அதிகப்படியான புகைமூட்டம் காரணமாக அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.

தடயவியல் நிபுணர்கள்
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து மேற்கொண்டனர். சம்பவம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு
சென்னை மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினார். தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புச் செல்வன், விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் விதிமுறை மீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடும் நடவடிக்கை
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஆய்வு முடிவை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications