கோவையில் கொட்டித் தீர்த்த பனி - கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட சென்னை விமானம்
கோவை: கோவையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் தரை இறங்க முடியாததால் விமானம் ஒன்று கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
கோவையில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கடும் குளிர் நிலவி வருகின்றது. இந்நிலையில் சென்னையில் இருந்து கோவைக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று இன்று காலை 7.20 மணிக்கு கோவை வந்தது. அந்த நேரத்தில் விமான நிலையத்தில் பனி மூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.
எனவே கோவை விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானம் கோவையில் தரை இறங்க அனுமதிக்கவில்லை. கொச்சி செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனால் அந்த விமானம் கொச்சி சென்று தரை இறங்கியது.
கோவையில் வானிலை சீரானதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காலை 9.30 மணிக்கு விமானம் கொச்சியில் இருந்து புறப்பட்டு 10 மணி அளவில் கோவையில் தரை இறங்கியது. அதன் பின்னர் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். 3 மணி நேர தாமதத்தால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.