ரூ.1000 கோடி ஒதுக்கிய மோடிக்கு நன்றி.. நிதி மக்களை சென்றடைய அனைத்து கட்சி குழு: கருணாநிதி
சென்னை: சென்னை வெள்ளத்தை நேரில் வந்து பார்வையிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, நிதி மக்களை சென்றடைய அனைத்து கட்சி குழு தேவை என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: மழை,வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கக் கூடிய அளவுக்கு பாதிப்புகளைக் ஆய்வு செய்து மேலும் தேவையான நிதியை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை உட்பட தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை பெய்துள்ளது.லட்சக் கணக்கான மக்கள் வீடிழந்து ,உடைமைகளை இழந்து , உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள் . பச்சிளங் குழந்தைகளுக்குப் பால் கூடக் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் தவிப்பைப் பார்க்கும் போது என் கண்கள் குளமாகிப் போகும் அளவுக்கு வேதனை என்னை வாட்டுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் சென்னைக்கு வந்து வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை நேரடியாகக் கண்டதோடு , ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்த நிவாரண உதவித் தொகை ரூ940 கோடியுடன் மேலும் ரூ1000 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் , மழை , வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கக் கூடிய அளவுக்கு பாதிப்புகளைக் ஆய்வு செய்து மேலும் தேவையான நிதியை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் ஏற்கனவே தெரிவித்திருந்தவாறு அனைத்துக்கட்சி குழு ஒன்றை அமைத்து கண்காணித்தால் தான் மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதி முழுமையும் முறையாக பாதிப்புக்கும், இழப்புக்கும் ஆளாகியுள்ள மக்களுக்குச் சேர்வதை உறுதி செய்ய முடியும் . எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக அனைத்துக்கட்சி குழுவை அமைத்து நிவாரண உதவிகளை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications