போராட்டத்துக்கு ஹைகோர்ட் தடை உத்தரவு எதிரொலி... செவிலியர்கள் போராட்டம் வாபஸ்
செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை : செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை அடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை செவிலியர்கள் திரும்ப பெறுவதாக அறிவித்தனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டால் அதுசட்டவிரோதமாகவே கருதப்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து செவிலியர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தை கைவிட்டனர். தற்போது மொத்தமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நோயாளிகள் அவதி
ஆனால் மற்றொரு பிரிவினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

ஹைகோர்ட்டில் வழக்கு
ஏழை, எளிய மக்கள் செல்லும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் பணியில் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

ஒட்டுமொத்தமாக
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கூறுகையில், பொதுச் சேவையில் ஈடுபடும் செவிலியர்கள் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் ஈடுபடுவது சரியா.

செவிலியர்கள் தரப்பு வாதம்
எந்த கோரிக்கையாக இருந்தாலும் பணியாற்றி கொண்டே பேசி தீர்த்துக் கொள்வதை விட்டு விட்டு இப்படி போராடினால் எப்படி. போராட்டத்தை கைவிட்டு செவிலியர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். அப்படி கைவிடாவிட்டால் செவிலியர்கள் தரப்பு வாதத்தை கேட்க முடியாது.

போராட்டத்தை கைவிடவேண்டும்
இரு சங்கங்களைச் சேர்ந்த செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபட இந்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கிறது. மீறி போராட்டத்தில் யாரேனும் ஈடுபட்டால் அது சட்டவிரோதமாகி நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகிவிடுவீர்கள். போராட்டத்தை கைவிட்டு விட்டு போராடினால் அரசும் சம ஊதியம் குறித்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

நாளை பணிக்கு திரும்ப வேண்டும்
போராட்டத்தை கைவிட்டவுடன் செவிலியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. நாளை காலை பணி நேரத்தில் அனைத்து செவிலியர்களும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து நாளை மாலைக்குள் பணியில் இருக்க உத்தரவிடுமாறு செவிலியர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், போராட்டம் என்றால் உடனே கூட முடிகிறது. பணி என்றால் போக முடியாதா என்று கேள்வி எழுப்பினார்.

கோர்ட் ஆர்டரை மதிக்கிறோம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதிகாரிகள் தங்களுடன் எப்போது பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற தேதியை அதிகாரிகள் அறிவிக்க வேண்டும். மேலும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்று செவிலியர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பொது சுகாதாரத் துறை இணை இயக்குநர் குழந்தைசாமி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார்.

போராட்டம் வாபஸ்
செவிலியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை மதித்தும் உள்ளிருப்பு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக செவிலியர்கள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications