ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு
ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 65 பேருக்கும் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
அந்த துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட வன்முறையின் போது, 65 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 65 பேரையும் சொந்த ஜாமீனில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாருஹாசினி விடுவித்தார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 65 பேரிடமும் மாவட்ட நீதிமன்ற நடுவர் பதிவு செய்த வாக்குமூலத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.