ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனுக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனுக்கு எதிராக மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப் 22-ஆம் தேதி உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
இந்த மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பொதுமக்கள் கருதினர். இதேபோல் அதிமுகவில் இருந்து தனி அணியாக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வமும் தெரிவித்து வந்தார். இந்நிலையில் அதிமுக இணையவேண்டுமானால் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. அவர் எழிலகத்தில் கடந்த சனிக்கிழமை விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனை ரத்து செய்யக் கோரி அதிமுகவின் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நேற்று வழக்கு தொடுத்தார். அதில் ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் விசாரணை நேர்மையாக நடைபெறாது என்றும் விசாரணை கமிஷனை அமைக்க சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்துதான் அமைக்க வேண்டும் என்றும் அந்த விசாரணை கமிஷனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை கமிஷனின் விசாரணை பாரபட்சத்துடன் நடைபெறுவதற்கான முகாந்திரம் இல்லை என்றும் இது போல் ஏற்கெனவே நடந்ததற்கான முன்னுதாரணங்களை மனுதாரர் குறிப்பிடவில்லை என்றும் கூறிய நீதிபதி அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.