சென்னை: நள்ளிரவில் இடிமின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை- விமான சேவை பாதிப்பு
சென்னை: சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. கன மழையால், சென்னை விமான நிலையத்தில் இருந்து 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. தற்போது நிலைமை சீரடைந்து விமான சேவைகள் வழக்கம் போல இயங்குகின்றன
சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் நள்ளிரவில் பலத்த மழை கொட்டியது.
அடையாறு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தவெளி, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, அண்ணாசாலை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் பூவிருந்தவல்லி, தாம்பரம், ஆவடி, சுற்றுவட்டாரங்களில் நேற்று நள்ளிரவு திடீரென பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
மேலும், தாம்பரம், பெருங்களத்தூர், முகப்பேர், குன்றத்தூர், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று காரணமாக சில இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தது.
விமான சேவை பாதிப்பு
நள்ளிரவு நேரத்தில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சிங்கப்பூரில் இருந்து 162 பயணிகளுடன் வந்த டைகர் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது.
பயணிகள் அவதி
பிராங்பர்ட் 248 பயணிகளுடன் வந்த லுப்தான்ஸா மற்றும் புனேவிலிருந்து 120 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.
காலையில் சீரடைந்தது
இந்நிலையில் இன்று அதிகாலையில் விமான சேவை சீரடைந்தது. திருப்பி விடப்பட்ட மூன்று விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக, சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.
வெப்பச்சலனம்
இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக பெய்து வரும் மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை
ஜூன் 5ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை இது வரை சென்னைக்கு சராசரி மழை பொழிவை தந்திருக்கிறது. இது வரை சென்னையில் சராசரியாக 144.7 மி.மீ மழை பெய்துள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் ஓரளவு மழை பெய்து வந்தாலும், ஜூலை மாதத்தில் வெயில் உச்சத்தை அடைந்தது. 10 ஆண்டுகளில் காணாத வெயிலை சென்னை நகரம் கண்டது.
மழை அளவு
இதனிடையே ஜூலை இரண்டாவது வாரத்துக்கு மேல் சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்தது. சென்னையில் ஜூலை 25ம் தேதி வரை நுங்கம்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளைவிட மீனம்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் பதிவான மழை நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் சராசரியாக 163 மி.மீ மழையும் மீனம்பாக்கத்தில் சராசரியாக165 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
குடிநீர் பிரச்சினை
இதே போல தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் நகரில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீர வாய்ப்புள்ளது என்று சென்னைவாசிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளது என்பதால் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.