மிரட்டும் கொரோனா.. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி விசாரணை.. ஏப்ரல் 10 முதல் துவக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 10ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது.
இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு உள்பட குறிப்பிட்ட சில மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது மெல்ல மெல்ல உயர தொடங்கி உள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் அனைத்து மாநில அரசுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொது இடங்களிலும் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வலியுறுத்தி வருகிறார்.
மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளை தனிமைப்படுத்தும் நோக்கில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் துவங்கியுள்ளது. இதன்மூலம் மக்களை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் களத்தில் இறங்கி உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்தது.
நேற்று மாலை தமிழ்நாடு அரசு வெளியிட்ட புல்லட்டின்படி பார்த்தால் தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,366 ஆக உள்ளது.

இதற்கிடையே தான் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு வழக்கு விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 10ம் தேதி முதல் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் நீதிமன்றத்தில் நேரடியாகவும் வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் விசாரணை நடைபெற உள்ளது. காணொலி வழி விசாரணையை வழக்கறிஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் கேட்டு கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications