சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை அடியோடு மாற்ற வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஷெனாய் நகரில் மாநகராட்சியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
மேலும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சியிடம் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆக்ரமிப்புகளைத் தடுக்க கடும் நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என்றும் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

அடுக்கடுக்கான கேள்வி
சென்னை மாநகராட்சியில் இருக்கும் ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்புக் குழுவின் பணி என்ன? என்றும் மாநகராட்சிக்குள்ளும் மாநகராட்சிப் பகுதிக்கு உள்ளேயும் லஞ்சத்தை ஒழிக்க எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது சென்னை உயர்நீதிமன்றம்.

நடவடிக்கைகள் என்ன?
மக்களுக்கான பணிகளை செய்வதற்காக லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஊழல் தொடர்பான புகார்கள் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

அதிரடி தீர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

புதிய அதிகாரிகள்
தமிழக டிஜிபியுடன் கலந்து ஆலோசித்து புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதிகாரிகளை இடமாற்றம் செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனிப்பிரிவு - உத்தரவு
அதிகாரிகளின் சொத்து கணக்கை ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் அனைத்து அலுவலகங்களிலும் ஊழல் கண்காணிப்பு தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்.

சிசிடிவி கேமராக்கள்
அனைத்து ஊழல் கண்காணிப்பு தனிபிரிவிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். யார் யார் புகார் தருகிறார்கள் என்பதை பதிவு செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

வரவேற்பறை அருகில்
மேலும் மாநகராட்சியின் வரவேற்பறை அருகிலேயே லஞ்ச ஒழிப்பு பிரிவை அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications