ப.சிதம்பரம் மீது வருமான வரித்துறை சுமத்திய குற்றச்சாட்டு.. தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்
ப.சிதம்பரத்திற்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட நான்கு பேருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
2010 மற்றும் 2011ம் ஆண்டுக்கான வருமானத்தை மறுஆய்வு செய்ய நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்கு வருமான வரித்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர், கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில், 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள எஸ்டேட்டில் விளையும் காபி கொட்டை, மிளகு உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் தங்கள் குடும்பத்திற்கு வருமானம் கிடைப்பதாக கூறி இருந்தனர்.
வேறு வகைகளில் வந்த வருமானத்தை விவசாய வருமான வரிச்சட்டத்தின் படி, வரிச்சலுகை பெற்று அனுபவித்து வந்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இதனடிப்படையில், 2010-11ம் ஆண்டிற்கான வருமான வரிக்கணக்கை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் கோரப்பட்டு இருந்தது.
மேலும், அந்த கணக்கு ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் வருமான வரித்துறை உதவி கமிஷனர் சார்பில் ப. சிதம்பரம் குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கும் கடந்த ஆண்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாகவும், துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுப்பியுள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்கள் வேண்டும் என்றே வருமானத்தை மறைத்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை; இவர்களின் கணக்குகளை அப்போதைய அதிகாரி ஆய்வு செய்துள்ளார்; விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு முழு வரி விலக்கு உள்ளது என்பதை அவர் முடிவு செய்துள்ள நிலையில் மீண்டும் ஆய்வு செய்யவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் பாரபட்சமானது என்றும், சட்டவிரோதமானது என்றும் தீர்மானிப்பதாகவும், அதனடிப்படையில் ப.சிதம்பரம் உள்ளிட்ட நால்வருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications