"சக்கரம்" மாறி சுத்துதே..ஹாட் சென்னை".. இந்த 1 மணி நேரம் ரொம்ப மெயின்.. தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்
தென்மேற்கு பருவ மழை விரைவில் துவங்க போகிறது.. இந்த மழையை நம்பிதான் பெரும்பாலான விவசாயிகள் காத்திருக்கிறார்கள்..
வழக்கமாக ஜுன் 1ம் தேதியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த வருடம் தாமதமாக துவங்குகிறது. எப்படியும் செப்டம்பர் மாதம் வரை மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக்கடல்: இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில், நாளை மறுநாள், அதாவது வருகிற 5-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்திருந்தார்..

அதேபோல வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் உருவாகும் என்றும் பிரதீப்ஜான் கூறியிருந்தார்..
தென்மேற்கு பருவமழை: அதாவது, "ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. அதற்கு பிறகுதான் வங்கக்கடலில் புயல் உருவாகும்" என்று கூறியிருந்தார்.
அதற்கேற்றபடி, புயல் உருவாகும் நேரத்தில் தரைகாற்று அதிகமாக வீசுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மைய நிபுணர்களும் தெரிவித்திருக்கிறார்கள்..
2 புயல்கள்: வருகிற 5-ந்தேதி அரபிக்கடலில் புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கக்கடலில் 9- ந்தேதி புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன..
அதுமட்டுமல்ல, அரபிக்கடலில் உருவாகும் புயல் தீவிரம் அடைந்து மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகருவதுடன், கேரளா மற்றும் கர்நாடகா பகுதியை இந்த புயல் நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால், வங்க கடலில் உருவாக உள்ள புயலின் தாக்கம் பற்றி இப்போதைக்கு எதுவுமே கணிக்க முடியாது என்றும் நிபுணர்கள் சொல்லி உள்ளனர்.
ஹாட் சென்னை: புயல் பற்றி இப்படியான தகவல்கள் வலம்வரும்நிலையில், வெயில் பற்றியும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. அதிலும் சென்னையில் மீனம்பாக்கத்தில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை வரை வெப்பம் உயர்ந்தது.. இதுகுறித்து நேற்றைய தினம்கூட, பிரதீப்ஜான் ட்வீட்களை பதிவிட்டிருந்தார்.

அதில், நுங்கம்பாக்கத்தில் வெப்பநிலை 41 டிகிரி செல்ஸியஸ் வரை நெருங்கி வருகிறது... அப்படின்னா, மீனம்பாக்கத்தில் எவ்வளவு வெப்பநிலை நிலவும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.. இன்று சென்னையின் நகர பகுதிகள் 42 டிகிரி செல்ஸியஸ் வரை செல்ல வாய்ப்புகள் உள்ளன என்று கூறியிருந்தார்.
இன்றும் ட்வீட்: இந்நிலையில், இன்றும் ட்வீட் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.. அதில், "கடல் காற்று மதியம் 1.00 மணி முதல் 2.00 மணிக்குள் கடற்கரை முதல் நுங்கம்பாக்கம் வரை வரும். மீனம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், போரூர் ஆகிய இடங்களில் மாலை 3.00 மணி முதல் 4.00 மணிக்குள் கடல் காற்று வரும். 43 டிகிரி செல்சியஸ் என்பது 109 டிகிரி பாரன் ஹீட் ஆகும்" என்று கூறியுள்ளார்.
நேற்றை விட இன்று மேலும் வெயில் அதிகரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன் சொல்லியுள்ளது, சென்னைவாசிகளை மேலும் கலங்கடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications